தமிழ் சினிமா சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது: ஜெ. பெருமிதம்
சென்னை: கடந்த 2 ஆண்டுகாலமாக தமிழ் சினிமா சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது என்று முதல்வர் ஜெயலலிதா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:
சினிமா பரிணாமம்
இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டம் பிரமிக்கத்தக்க சாதனையாகும். ஊமைப்படமாக தொடங்கிய சினிமா, பேசும் படம், வண்ணப்படமாக பரிணாமம் பெற்றிருக்கிறது.
சினிமா கண்டுபிடிக்கும் முன் இசை, ஓவியம் மற்றும் நாட்டியக் கலைகள் மக்களை மகிழ்வித்தன. பிற கலைகளைவிட கவர்ந்திழுக்கும் வலிமை திரைப்படத்துக்கு அதிகம்.
எண்ணற்றோர் பங்கு
நடிகர்கள், நாடக கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள. புகைப்படக் கலைஞர்கள, பின்னணி பாடகர்கள், பாடகிகள், பாடலாசிரியர்கள் என எண்ணற்றோரின் பங்கு இந்திய திரையுலகிற்கு மகத்தானது.
நீங்கா இடம்பிடித்தோர்
ஸ்ரீராமுலு நாயுடு, மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், தியாகராஜ பாகவதர், சின்னப்பா, தங்கவேலு, நாகேஷ், சத்யஜித்ரே, திலீப் குமார், பீம்சிங், சங்கர், ஏ.பி.நாகராஜன், என்.எஸ்.கே., ஜெமினி, ரங்கராவ் உள்ளிட்ட பலரும் திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை பரப்பி மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளனர்.
2 ஆண்டுக்கு முன்பு எப்படி இருந்தது?
வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
எதிரிகளை அழிக்க..
அப்போதைய தமிழ் சினிமா எதிரிகளை அழிக்கும் நிலைதான் இருந்தது.
சுதந்திரமாக இருக்கிறது
கடந்த 2 ஆண்டுகளாக திரைப்படத்துறை மிக சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. சமூகத்தை நல்வழிப்படுத்துவதே திரைப்படத்துறையின் நோக்கமாக இருக்கவேண்டும்.
வன்முறை, ஆபாசத்தை தவிருங்கள்
வன்முறை, ஆபாச காட்சிகளை தவிர்த்து திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும். திரைப்படத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்றார்.