மத்திய சென்னை தமிழ்மாநில முஸ்லீம் லீக் தலைவர் வெட்டிக்கொலை
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் அக்பர் (வயது 32). தமிழ்மாநில முஸ்லிம்லீக் மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்தார். ரமலான் நோன்பு காலம் என்பதால் அக்பர் நோன்பு இருந்து வந்தார்.
திங்கட்கிழமையன்று காலை 4 மணியளவில் நோன்பு இருக்கும் ஷகர் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக ஐஸ் ஹவுஸ் டாக்டர் பெசன்ட் தெருவில் உள்ள பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த 5 பேர் கொண்ட கும்பல் அக்பரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. மசூதி அருகில் இருந்த காரணத்தால் சத்தம் கேட்டு பலர் வரவே, மர்மகும்பல் தப்பி ஓடிவிட்டது. அங்கு பலத்த வெட்டு காயத்துடன் கிடந்த அக்பரை உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அக்பரைக் கொன்ற கும்பல் திட்டமிட்டு தங்கள் கொலை வெறி தாக்குதலை நிறைவேற்றியுள்ளது.
அக்பர் கொல்லப்பட்ட தகவல் தெரிந்ததும் அவரது குடும்பத்தினர்கள், கட்சி நிர்வாகிகள் ஐஸ் ஹவுஸ் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். கொலையாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த படுகொலை குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரசியல் முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.