கொழும்பு பேச்சுவார்த்தையை புறக்கணித்தது தமிழகம்... 'அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்!'
சென்னை: அனைத்து தமிழ் மீனவர்களும் விடுதலை செய்யப்படும் வரை இலங்கையுடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்பதாக இல்லை என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இதன் மூலம் கொழும்பில் நேற்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை இரண்டாம் முறையாக தமிழக அரசு புறக்கணித்துவிட்டது.
பாக். ஜலசந்தி உள்ளிட்ட சில மீன்பிடி பகுதிகளில் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே மீன்பிடிப்பு தொழிலில் பிரச்சினைகள் தொடர்கின்றன.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் சந்தித்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவிடம் மீனவச் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்தலாம் என்றும், அதற்கு முன்பதாக இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு நிர்ப்பந்தித்தது.
அத்துடன் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை தமிழக அரசு விடுதலை செய்தது. இரு நாடுகளும் மீனவர்களை பரஸ்பரம் விடுதலை செய்த பிறகு இரு நாட்டு மீனவர்கள் கூட்டம் ஜனவரி 27 - ந் தேதி சென்னையில் நடந்தது.
அடுத்தகட்ட பேச்சு வார்த்தையை மார்ச் 13-ந் தேதி கொழும்பில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இரண்டு நாடுகளுமே அறிவித்த பின்னர், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலர் தொடர்ந்து இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு வந்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். அதில், முதற்கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால் தமிழக அரசின் கேட்டுக் கொண்டபடி 177 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்படவில்லை. 13-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டிய நிலையில் அதற்கு முந்தைய நாளில் முதற்கட்டமாக 42 மீனவர்களும், அதன் பிறகு 74 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுடைய 20-க்கும் மேற்பட்ட படகுகளும் விடுவிக்கப்பட்டன.
புறக்கணிப்பு
தமிழக மீனவர்களில் இன்னும் சிலர் விடுவிக்கப்பட வேண்டியதுள்ளது என்பதால் 13 -ம் தேதி கொழும்பில் நடக்க இருந்த பேச்சுவார்த்தையில் தமிழகம் கலந்துகொள்ளவில்லை.
எனவே இந்த பேச்சுவார்த்தை தேதியை 25-ந் தேதிக்கு (நேற்று) இலங்கை தள்ளி வைத்தது. ஆனாலும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையை இலங்கை அரசு குறைத்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் எழுதிய கடிதத்தில், மீதமுள்ள 74 தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்காவிட்டால், 25 - ந் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் தமிழகம் பங்கேற்காது என்று உறுதிபட தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று கொழும்பில் இலங்கை அரசு நேற்று ஏற்பாடு செய்திருந்த பேச்சுவார்த்தையில் தமிழகம் பங்கேற்காமல் புறக்கணித்தது.
இதுபற்றி தமிழக அரசின் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, ‘பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில் தமிழகத்தின் நிலை தெளிவாக கூறப்பட்டுள்ளது. அனைத்து தமிழக மீனவர்களும், படகுகளும் விடுவிக்கப்படும் வரை இலங்கை தரப்புடன் பேச்சுவார்த்தை இல்லை என்பதில் தமிழ அரசு உறுதியாக இருக்கிறது,' என்றார்.