ரூ. 300 கட்டணத்தில் பெண்கள் விடுதி- தமிழக அரசின் புதிய திட்டம்
சென்னை: சொந்த ஊரை விட்டு வேலை, படிப்புக்காக சென்னை போன்ற நகரங்களுக்கு வரும் பெண்களுக்கு மிகப்பெரிய கவலையே தங்குமிடம்தான்.
விடுதிகள் கிடைப்பதற்குள் வேலையே வேண்டாம் என்ற எண்ணமே தோன்றிவிடும்.
இன்னும் தங்குமிடம் கிடைத்தாலும் அதன் வாடகை, மற்ற செலவுகள் என வீட்டிற்கே பணம் அனுப்பக்கூட தத்தளிக்கும் நிலைமை ஏற்படுகின்றது.
அரசாங்க பெண்கள் விடுதி:
இந்த கவலைகளைப் போக்கவும், பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும் தற்போது அரசு விடுதிகளை சமீபத்தில் திறந்திருக்கின்றது அரசின் சமூக நலத்துறை.
300 ரூபாய் கட்டணம்:
ரூபாய் 300 கட்டணத்தில் 12 இடங்களில் இவ்விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.
12 இடங்கள்:
சென்னையைப் பொருத்த வரையில் பெரம்பூர், வியாசர் பாடி, பள்ளிக்கரணை, சேலையூர், ஒக்கியம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளிலும், திருச்சி, கோவை, விழுப்புரத்திலும் இவ்விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.
மற்ற இடங்களில் 200:
சென்னையில் 300 ரூபாய் கட்டணம், மற்ற பகுதிகளில் 200 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் போதும்:
ஒரு விடுதியில் 50 பெண்கள் சேர முடியும். இவ்விடுதியில் சேர ரேஷன் கார்டு ஜெராக்ஸுடன், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை இணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சமூக நலத்துறை அலுவலரிடம் ஒரு வெள்ளைத் தாளில் விண்ணப்பம் அளித்தால் போதுமானது.
வெளியூர் பெண்களுக்கே அனுமதி:
உணவு மற்றும் பராமரிப்பு கட்டணம் மட்டும் தங்கியிருக்கும் பெண்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விடுதிகளில் வெளியூர் பெண்களுக்கு மட்டுமே முன்னுரிமை கிடைக்கும். அதே ஊரைச் சேர்ந்த பெண்கள் தங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.