சிவாஜி கணேசன் சிலையை அகற்றலாம்!- தமிழக அரசு
சென்னை: போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகக் கருதினால் நடிகர் சிவாஜி கணேசன் சிலையை மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றலாம் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று தமிழக அரசு தனது பதில் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில், காமராஜர் சாலையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்பும்போது, மற்ற மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களை இந்த சிலை மறைப்பதால், இந்த பகுதியில் அதிக விபத்துகள் நேர்ந்துள்ளன என்றும், இதனால் அநதச் சிலையை அகற்றலாம் என்றும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
முன்னதாக, இந்த சிலையை அகற்றக் கூடாது என தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களும் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் மனு கொடுத்திருந்தன.
இப்போது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு, தமிழ் சினிமாவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.