யார் சொன்னா குஜராத் பெஸ்ட்ன்னு; முதலில் தமிழகத்தை மோடி பார்க்கட்டும்.. ராகுல் காந்தி
ராமநாதபுரம்: குஜராத்தைவிட தமிழகம்தான் வளர்ச்சியில் சிறந்த மாநிலம் என்று என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து ராகுல்காந்தி இன்று மதியம் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனக்கு தெரியும்
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை அறிவேன். மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும்போது மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். எங்களது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்.
மதிய உணவு தந்தது நாங்கள்தான்
பெருந்தலைவர் காமராஜனை நான் நினைவு கூற விரும்புகிறேன். அவர் முதல்வராக இருந்தபோதுதான் தமிழகத்து பள்ளிகளில் மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. காமராஜர் காட்டிய வழியில் நாங்கள் பயணித்து நாடு முழுவதும் தற்போது 12 கோடி பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு அளித்துவருகிறோம். நீண்ட காலத்துக்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. எனவே தொண்டர்கள் மிகவும் உற்சாகத்துடன் தேர்தல் பணியாற்றிவருகிறார்கள். இதைப்பார்த்து எனக்கும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து நின்று ஆட்சியைபிடிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
வெறுப்பா.. அப்படீன்னா
எதிர்க்கட்சியைப்போல மக்களிடம் வெறுப்பை தூண்டிவிடும் அரசியல் எங்களுக்கு தெரியாது. வன்முறையிலும் காங்கிரசுக்கு நம்பிக்கை கிடையாது. இந்துக்களையும், முஸ்லிம்களையும் மோதச்செய்யும் மத்திய அரசு நமக்கு தேவையில்லை. மதசார்பற்ற, ஏழைமக்கள் ஆதரவுள்ள அரசுதான் தேவை. ஊழல் பற்றி பேசும் எதிர்க்கட்சி தனது தேர்தல் அறிக்கையில், அதுகுறித்து எதுவுமே கூறவில்லை.
ஆர்டிஐ தந்தது யாரு
உங்கள் வீட்டு பக்கத்தில் ரோடு சரியில்லையா, காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்டிஐ சட்டத்தை பயன்படுத்தலாம். மறைத்து செய்யப்படும் ஊழல்களை அம்பலப்படுத்துவதற்கு ஆர்டிஐ பெரிய ஆயுதமாக பயன்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தைபோல மருந்து உரிமை, அறுவை சிகிச்சை உரிமைகளுக்கும் சட்டம் கொண்டுவரப்படும்.
லோக்பாலுக்கு நாங்க கேரண்டி
ஊழலுக்கு எதிரான மற்றொரு அஸ்திரமான லோக்பால் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது காங்கிரஸ்தான். அந்த மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுக்க எதிர்க்கட்சிகள் செய்த முயற்சி பலிக்கவில்லை. ஊழலுக்கு எதிரான மேலும் ஐந்து சட்டங்களை தாக்கல் செய்ய காங்கிரஸ் முயன்றது. அதை எதிர்க்கட்சியினர் தடுத்துவிட்டனர்.
விவசாயி.. விவசாயி
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட கடனைவிட காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் 7 மடங்கு அதிக கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாய நிலத்தை அரசு நினைத்தால் உடனடியாக கையகப்படுத்த முடியாதபடி வலுவான சட்டத்தை கொண்டுவந்துள்ளோம்.
பெண்களுக்கு ஜே
தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக விளங்க இங்குள்ள பெண்களின் பங்களி்ப்புதான் முக்கிய காரணம். பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடை வழங்கியது காங்கிரஸ் அரசுதான். தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக இயங்கிவருகின்றன. பெண்கள் பலரும் வங்கி நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். இக்கூட்டத்திற்கு பெண்கள் திரளாக வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. காவல்துறையில் பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். 2000 மகளிர் காவல் நிலையங்கள் திறக்கப்படும், மகளிர் சுய உதவி குழு திட்டம் விரிவுபடுத்தப்படும்.
தமிழ்நாடுதான் டாப்
குஜராத் மாடல் பற்றி நரேந்திரமோடி பேசிவருகிறார். அவர் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழக மாடலை பார்க்கட்டும். இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே தாங்கள் எப்படிப்பட்ட திறமைசாலிகள் என்பதை தமிழர்கள் காண்பித்துள்ளனர். தொழில் காரிடார்களை நாடு முழுவதும் அமைக்க திட்டமிட்டுள்ளோம். அப்படி அமையும்போது தமிழகத்து இளைஞர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பு கிடைக்கும். குஜராத்தில் வளர்ச்சி என்பது தொழிலதிபர்களின் வளர்ச்சிதானே தவிர மக்களின் வளர்ச்சி கிடையாது. நாட்டின் சாவியை நரேந்திரமோடி கேட்கிறார். குஜராத்தின் சாவியை அவரிடம் கொடுத்ததற்கு பலனாக தொழிலதிபர் அதானி மட்டும்தான் வளர்ந்தார்.
இளைஞர்களே நீங்கள் அணிந்திருக்கும் டி-சட்டைகளிலும், கைக்கடிகாரங்களிலும், இது சீனாவில் தயாரிக்கப்பட்டது என்ற வாசகம் இருக்கும். இனிமேல் 'இது தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது, இந்தியாவில் தயாரிக்கப்பட்டது' என்ற வாசகங்கள் இடம்பெறும் காலம் வரும். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
குஜராத்தைவிட தமிழகம்தான் வளர்ச்சியடைந்த மாநிலம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறிவரும் நிலையில், ராகுல்காந்தியும் அந்த கருத்துக்கு வலு சேர்த்திருப்பது நினைவுகூறத்தக்கது.