உள்ளாட்சி இடைத்தேர்தல்: அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக வாக்குப்பதிவு நிறைவு
சென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது.
கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிகள், அரக்கோணம், கடலூர் உட்பட 4 நகராட்சிகளின் தலைவர் பதவிகள், 8 மாநகராட்சி உறுப்பினர் பதவிகள், 23 நகராட்சி உறுப்பினர்கள் பதவிகள், 39 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் உட்பட 530 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
7 மணிக்கு வாக்குப்பதிவு
வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதையொட்டி அந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மின்னணு இயந்திரங்கள்
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. மற்ற உள்ளாட்சி பதவிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் வாக்குச்சீட்டு முறைப்படி ஓட்டுக்கள் போடப்பட்டன.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
பதட்டமான வாக்குச்சாவடிகளில் நடத்த ஓட்டுப்பதிவு முழுவதும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டன. காலை முதலே பெரும்பாலான பகுதிகளில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. ஆண்களும் பெண்களும் நீண்ட ‘கியூ'வில் நின்று ஓட்டு போட்டனர். நேரம் ஆக ஆக ஓட்டுப்போட வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமானது.
கோவையில் மந்தம்
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கணபதி ராஜ்குமார், பாஜக வேட்பாளராக நந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக பத்மனாபன் உள்பட 16 பேர் போட்டியிடுகிறார்கள்.
236 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
கோவை மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுப்பதற்காக 100 வார்டுகளிலும் 1,226 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 236 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவை என்று அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீசார் வாகனங்களில் ரோந்து வந்தனர்.
தூத்துக்குடியில் மேயர் வேட்பாளர்கள்
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் அந்தோணி கிரேசி, பாஜக சார்பில் ஜெயலட்சுமி மற்றும் 5 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதுபோன்று 37 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலும் இன்று நடந்தது. இதற்காக 250 வாக்குச்சாவடிகள் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
ஓட்டு போட்ட வேட்பாளர்கள்
காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். காலை 7.05 மணிக்கு பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமியும், 8.00 மணிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் அந்தோணி கிரேசியும் தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் புனித தோமையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தனர். போலீஸ் பாதுகாப்பு பதட்டம் நிறைந்த 114 வாக்குச்சாவடிகளில் கேமரா மூலம் வாக்குப்பதிவு கண் காணிக்கப்பட்டது. மேலும் அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
22ல் வாக்கு எண்ணிக்கை
இன்று மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. பின்னர் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சீட்டு முறையில் ஓட்டுப் பதிவு நடத்த வாக்குச்சாவடிகளில் உள்ள ஓட்டுப்பெட்டிகள் ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. இன்னும் சில மணி நேரங்களில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு போகப்படுகிறது. 22ஆம்தேதி ஓட்டு எண்ணிக்கை நடை பெறுகிறது.