அமைச்சர் எம்.சி. சம்பத் பயணம் செய்த கார் மீது மணல் லாரி மோதல்... தலையில் படுகாயம்!
கடலூர்: கடலூர் அருகே அமைச்சர் எம்.சி. சம்பத் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதில் அவர் தலையில் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் நகரசபை தலைவர் தேர்தலில் போட்டியிடும் குமரனை ஆதரித்து தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று கடலூரில் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் இரவு 10.30 மணியளவில் பண்ருட்டி திருமலைநகரில் உள்ள அவரது வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
கடலூரை அடுத்த தோட்டப்பட்டு அருகே சென்றபோது, முன்னால் சென்ற மணல் லாரியை கார் டிரைவர் முந்தி செல்ல முயன்றார். அப்போது காரின் பக்கவாட்டில் லாரி திடீரென மோதியது.
அமைச்சர் படுகாயம்
இதனால் நிலைதடுமாறிய கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டோர வயலுக்குள் இறங்கியது. இதில் காரில் பயணம் செய்த அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. கார் டிரைவர் ராஜேந்திரனுக்கும் காலில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக கடலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர், அமைச்சர் சம்பத் வீடு திரும்பினர்.
இதுபற்றி தகவலறிந்ததும், ஏராளமான அ.தி.மு.க. பிரமுகர்கள் மருத்துவமனை முன் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக லாரி ஓட்டுநரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.