மு.க. ஸ்டாலின், அழகிரி, அன்புமணி, கார்த்தி சிதம்பரம்... மகன்கள் கைகளில் தமிழக அரசியல்
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒதுங்கிக் கொள்ள அவர்களது மகன்களின் ஆதிக்கமே இப்போது மேலோங்கி இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் திமுகவில் மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, பா.ம.க.வில் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கூட்டணி விவகாரத்தில் மிக முக்கியமான பங்கு வகித்தவர்கள்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க வேண்டும் என்று சுழி போட்டவர் மு.க. ஸ்டாலின். இந்த சுழியைப் பிடித்துக் கொண்டு மத்திய அமைச்சரவையில் இருந்து திமுகவை வெளியேற்ற வைத்தார் மு.கஸ்டாலின்.
காங்கிரஸை உதறி தேமுதிகவுக்கு முயற்சி
அத்துடன் திமுக பொதுக்குழுவில் காங்கிரஸ்- பாஜகவுடன் கூட்டணி அமைக்கவே கூடாது என்று தீர்மானமும் நிறைவேற்ற வைத்தார் மு.க. ஸ்டாலின். பின்னர் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க பகீரத முயற்சிகளை மேற்கொண்டார் மு.க.ஸ்டாலின்.
கூட்டணியை உருவாக்கிய ஸ்டாலின்
தேமுதிகவுடனான கூட்டணி முயற்சிகள் கை கொடுக்காத போதும் கவலைப்படவில்லை. இருக்கிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டையும் முடித்து வைத்ததில் முன்னணி பாத்திரம் வகித்தவர் மு.க. ஸ்டாலின்.
வேட்பாளர் தேர்வில் ஸ்டாலின்
முன்னெப்போதும் இல்லாத வகையில் திமுகவின் வேட்பாளர் நேர்காணலை முன்னின்று நடத்தியதும் மு.க. ஸ்டாலினே. வேட்பாளர்கள் தேர்வில் பலரது பரிந்துரைகளை நிராகரித்து தமது ஆதரவாளர்களை தேர்வும் செய்தவரும் அவரே.
பிரசாரத்தில் ஸ்டாலின்
திமுகவின் ஒற்றை முதன்மை பிரசார தளபதியாக மாநிலம் முழுவதும் சூறாவளியாக சுழன்று வருகிறார் ஸ்டாலின்.
அதிருப்தி அழகிரி
அதே நேரத்தில் தமக்கு கட்சியில் போட்டியாக இருந்த சகோதரர் மு.க. அழகிரியையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியிலிருந்தே சஸ்பென்ட் செய்தும் ஒதுக்கி வைத்துவிட்டார் மு.க. ஸ்டாலின்.
ஸ்டாலினை கவிழ்த்த அழகிரி
தம்பி மு.க.ஸ்டாலின், திமுகவை கைப்பற்றுவதா? என்பதை தொடக்கம் முதலே எதிர்த்தவர் மு.க. அழகிரி. ஆனால் மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக வெளியேறியது முதல் இந்த உட்கட்சி போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. தேமுதிகவுடன் திமுக கூட்டணி அமைப்பதற்கான அத்தனை வாய்ப்புகளையும் ஸ்டாலின் உருவாக்கி வைத்த நிலையில் அதை தர்க்கும் வகையில் அதிரடி பேட்டி கொடுத்தார் அழகிரி. இதனால் ஸ்டாலின் வியூகத்துக்கு பின்னடைவு உருவானது.
ஓரம் கட்டப்பட்ட அழகிரி
இதைத் தொடர்ந்து உருவான மோதல்களின் முடிவாக மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
மன்மோகன்,ரஜினி, வைகோவுடன் அழகிரி
ஆனாலும் அடங்காத மு.க. அழகிரி பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார். நடிகர் ரஜினியை சந்தித்தார். அத்துடன் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோவை சந்தித்தார். இன்று வைகோவை தமது வீட்ட்டுக்கே வரவழைத்தும் பேசி இருக்கிறார். தொடர்ந்தும் திமுகவை விமர்சித்தபடியே அரசியல் சீனில் இருந்து வருகிறார் அழகிரி.
அன்புமணி ராமதாஸ்
இதேபோல்தான் பா.ம.கவின் இளைஞரணித் தலைவரும் டாக்டர் ராமதாஸின் மகனுமாகிய அன்புமணி. திராவிடக் கட்சிகளோடும் தேசியக் கட்சிகளோடும் கூட்டணியே கிடையாது என்று சத்தியம் செய்தவர் ராமதாஸ். ஆனால் பாரதிய ஜனதாவுடன் அல்லது காங்கிரஸுடன் எப்படியாவது கூட்டணி அமைத்துவிடுவது என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டவர் அவரது மகன் அன்புமணி.
போராடி கூட்டணி
இத்தனைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் செய்து கொண்டிருந்த நிலையில் பாஜகவுடன் வாழ்வா? சாவா? போராட்டம் நடத்தி பரம வைரியாக கருதும் தேமுதிகவுடன் கரம் கோர்த்து பாமகவை கூட்டணியில் ஐக்கியப்படுத்தியதற்கு அன்புமணி மட்டுமே காரணம். இதை அவரது தந்தை ராமதாஸ் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் சகிக்க முடியாத போதும்கூட சளைக்கவில்லையே அன்புமணி. இப்போது பாஜக கூட்டணியில் தேமுதிகவுடன் பாமக கை கோர்த்துக் கொண்டுள்ளது.
கார்த்தி சிதம்பரம்
இந்த வகையில் இப்போது பகிரங்கமாக இணைந்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இதுவரை காங்கிரஸ் கட்சிக்குள் ப.சிதம்பரம் கோஷ்டியை வழிநடத்தி வந்த கார்த்தி சிதம்பரம் தற்போது சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார். ப.சிதம்பரமோ, வயதாகிவிட்டது.. காந்திய வழியில் அரசியல் சேவையாற்றுவேன் என்கிறார். கார்த்தி சிதம்பரம், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல் அவரைத்தான் தமிழக காங்கிரஸ் முகமாக வட இந்திய ஊடகங்கள் முன்னிலைப்படுத்தி வருகின்றன. கார்த்தி வென்றாலும் தோற்றாலும் தமிழக காங்கிரஸில் அவருக்கான பிடி நிலைப்படுத்தப்பட்ட ஒன்றாகிவிட்டது என்பதுதான் யதார்த்தமாகிவிட்டது.
இனி தமிழக அரசியல் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, அன்புமணி ராமதாஸ், கார்த்தி சிதம்பரம் ஆகிய தலைவர்களின் மகன்களை முன்வைத்தே நகரும்...