2 அதிகார மையங்களை எதிர்த்துப் போராடி களம் கண்டோம், மாற்று சக்தியாக மாறியிருக்கிறோம் - தமிழிசை
சென்னை: இரு நகராட்சித் தலைவர் தேர்தலில் எங்களது வேட்பாளர்கள் டெபாசிட்டைத் தக்க வைத்துள்ளனர். சில வார்டுகளில் நாங்கள் வென்றுள்ளோம். மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் இது. இந்தப் போர்க்களத்தில் கடுமையான சவால்களைச் சந்தித்து நாங்கள் போட்டியிட்டுள்ளோம். தமிழகத்தின் மாற்று சக்தி பாஜகதான் என்பதையும் நாங்கள் நிரூபித்துள்ளோம் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
உள்ளாட்சி இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவிக்கையில், தேர்தலை எப்படி ஜனநாயக ரீதியில் நேர்மையான முறையில் சந்திக்க வேண்டுமோ அதை சற்றும் பிசகாமல் பாரதீய ஜனதா கட்சி சந்தித்தது.
தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம், பணபலம், அராஜகம், மிரட்டல் அத்தனையையும் எதிர்த்து களத்தில் தைரியமாக நின்றோம். மிகப்பெரிய போர்க்களத்தை சந்தித்த உணர்வு ஒவ்வொரு தொண்டருக்கும் கிடைத்துள்ளது.
வீதிக்கு வீதி அமைச்சர்கள் முகாமிட்டு இருந்தனர். அப்படியிருந்தும் கடைசி நிமிடம் வரை சமரசம் செய்து கொள்ளாமல் மிகப்பெரிய போர்க்களத்தை எங்கள் தொண்டர்கள் சந்தித்தார்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
திணிக்கப்பட்ட இந்த தேர்தல் மீது மக்களுக்கு விருப்பமில்லை. பல இடங்களில் ஓட்டு போட விடாமல் தடுக்கப்பட்டனர். இப்படி பவ்வேறு காரணங்களால் ஓட்டுப்பதிவு மிகவும் குறைந்தது. இவ்வளவு குறைவான வாக்குப்பதிவிலும் 3-ல் ஒரு பங்கு வாக்குகளை பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ளது. ஓசூர், ராமநாதபுரத்தில் டெபாசிட்டை தக்க வைத்துள்ளோம். சில வார்டுகளை கைப்பற்றி இருக்கிறோம்.
இந்த தேர்தல் எங்களுக்கு சக்தியை கொடுத்துள்ளது. தமிழகத்தில் ஒரு மாற்று சக்தியாக பாரதீய ஜனதா உருவெடுத்து வருவதை நிரூபித்துள்ளோம்.
முறைகேடுகள் மூலமும், பண பலத்தன் மூலமுமே ஆளும்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை. பண பலத்திற்கும், மன பலத்திற்கும் நடந்து கொண்டிருக்கும் தேர்தல் என்று சொன்னேன். ஆளும்கட்சி பண பலத்தால் வெற்றி பெற முடியும் என்று இந்த தேர்தல் காட்டுகிறது. ஆனால் அந்த வெற்றி சாதாரணமாக பெற்றுவிட முடியாது என்பதை இது காண்பிக்கிறது.
நாங்கள் இரண்டு அதிகார மையங்களை எதிர்த்து போராட வேண்டியிருந்தது. ஒன்று ஆளும்கட்சி. இன்னொன்று தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்துகொள்ளவில்லை என்று வழக்காடு மன்றம் சென்றோம். வழக்காடு மன்றத்தில், தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்து கொள்ளவேண்டும் என்று நீதிபதி கூறினார். ஆனால் அதனை அப்பட்டமாக மீறினார்கள். ஆகவே இரண்டு அதிகார மையங்களை எதிர்த்து போராடினோம்.
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்துகொள்ளவில்லை என்பதற்காக தேர்தலை நிறுத்த வேண்டும் என்று கோரினோம். வாக்கு எண்ணிக்கையின்போது சீல் இல்லாமல் பல வாக்கு இயந்திரங்கள் வந்துள்ளது. இதுவே தேர்தல் நடுநிலையோடு நடைபெறவில்லை என்பதை காண்பிக்கிறது. அங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருப்பது இதற்கு சான்று. பல இடங்களில் கள்ள ஓட்டு போட்டிருப்பதும் இதற்கு சான்று என்றார் தமிழிசை.