நான் தமிழிசை செளந்தரராஜன் பேசுகிறேன்....!
சென்னை: பாஜக தேசியச் செயலாளரும், மகப்பேறு மருத்துவருமான தமிழிசை செளந்தரராஜன் தனது பேஸ் புக் பக்கத்தில் ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
தனது அரசியல் பாதை, தான் சந்தித்த இடையூறுகள், தனது சாதிக்கும் எண்ணம் உள்ளிட்டவற்றை விளக்கி அழகாக எழுதியுள்ளார்.
தமிழிசையின் அந்த 'போஸ்ட்' இதோ...
தெளிவுபடுத்த நினைக்கிறேன்
அன்பான சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். சாதரணமாக யூகங்களுக்கு நான் பதிலளிப்பதில்லை ஆனாலும் இதற்கு பதிலளித்து தெளிவு படுத்தவேண்டும் என நினைக்கிறேன
எதி்ர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை
நான் எதையும் எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை. 14 வருடங்களாக கட்சியின் அடிமட்டத்தில் இருந்து உழைத்து இந்நிலையை எய்தியிருக்கிறேன்.
யாருமே சந்தித்திராத எதிர்ப்புகள்
ஒர் கட்சியில் சேர்ந்ததற்காக குடும்பத்திடம் இருந்து மிகக் கடுமையான எதிர்ப்பை யாரும் சந்தித்திருக்க முடியாது. பல நாட்கள் என் தந்தை என்னிடம் பேசாதிருந்தது உட்பட எவ்வளவோ.....
ஆர்.எஸ்.எஸ் குறித்து அறிந்திராதவள்
ஆர்.எஸ்.எஸ். பற்றி அதிகம் அறிந்திராத நான் சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் மிக ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு ரத்தம் கெரடுக்கவந்த சுயம்சேவகர்களைப்பற்றி அறிந்து கொண்டது ஓர் திருப்புமுனை.
இன்று வரை கொள்கையில் உறுதி
இன்று வரை கொள்கைகளில் உறுதியாக நின்று பணியாற்றுகிறேன். நான் ஒரு மாறுபட்ட அரசியல்வாதியாகவே விரும்புகிறேன். அதிகாரம் என்பதை விட அன்பு வழியே நான் விரும்புவது. இதை என்னோடு பழகியவர்கள் நன்கு அறிவர்.
புண்படுத்தும்படி பேசலாமா..?
கருத்து சொல்ல அனைவருக்குமே உரிமை இருக்கிறது ஆனாலும் ஓருவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் கருத்து சொல்வது புண்படுத்தக்கூடும்.
அல்வா கொடுத்து விடுவார் என்று பேசலாமா?
வெளிநாடுகளில் படித்து மிக உயர்ந்த மருத்துவ பணியை உதறிவிட்டு சமுதாயப்பணி ஆற்றுபவரை அல்வா கொடுத்துவிடுவார் என்று ஒர் மருத்துவரே comment செய்வதும், அரசியல் என்பது பெண்களுக்கு எவ்வளவு சவாலான துறை என்பது மட்டுமல்ல அங்கீகாரம் கிடைக்க பல பல மடங்கு அதிகம் உழைக்க வேண்டும் என்பதை அறியாமல் என்ன சாதித்துவிட்டார் என்று ஓர் பெண்ணே comment செய்வதும்... நியாயமா என்ற கேள்வியை மட்டுமே முன் வைக்கிறேன்.
எதிர்மறை அரசியலில் நம்பிக்கை கிடையாது
எனக்கு என்றுமே எதிர்மறை,மறைமுக அரசியலில் நம்பிக்கை கிடையாது. நேர்மையும் நேர்மறையான எண்ணங்களும் தன்னலமற்றலும் தன்னம்பிக்கையுமே என் பலம். என் இறைவனை நம்புவதைப் போலவே நம்புகிறேன்.
குமரி -நெல்லை- சென்னை- கோவை
எல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுமே என்னிடம் அன்புடன் பழகுகிறார்கள். நான் மேடையில் பேசும்போது சொல்வது உண்டு. குமரி என் தந்தை மாவட்டம், நெல்லை தாய் மாவட்டம், சென்னை, திருவள்ளூர் சகோதர மாவட்டம், கோவை நான் புகுந்த மாவட்டம். உறவுகள் அவ்வளவே....
சொல்ல வேண்டும் என்று தோன்றியது
ஆர்வம் மிகுதியரலும் அன்பு மிகுதியாலும் சொல்லும் கருத்திற்கு நாம் பொருப்பாக மாட்டோம் என்றாலும், சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
பண்படுத்தி நாடாளுமன்றம் போவேன்
நாடாளுமன்றம் போகமுடியும் என ஆழமாக நம்புகிறேன். யாரையும் புண்படுத்தி அல்ல என்னைப் பண்படுத்தி மட்டுமே...