குடிக்காமலேயே தலையை சுற்ற வைக்கும் "பார்கள்".. கடும் ஏலத் தொகையால் அடுத்தடுத்து மூடல்!!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளின் பார்களின் ஏலத் தொகை கடுமையாக உயர்ந்துள்ளதால் பலரும் பார்களை மூடி விட்டு வேறு வேலையைப் பார்க்கப் போக ஆரம்பித்துள்ளனர்.
இப்படிப் பார்கள் மூடப்படுவதால் ஆற அமர்ந்து குடிக்க முடியாமல் குடிகாரர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்களாம்.
கிட்டத்தட்ட 100 பார்கள் வரை இப்படி மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
228 கடைகள்.. கூடவே பார்கள்
நெல்லை மாவட்டத்தில் 228 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஓட்டி பார்களும் செயல்பட்டு வருகின்றன. 2013-14ம் ஆண்டு பார் நடத்துவதற்கான உரிமம் கடந்த 30ம் தேதியுடன் முடிவடைந்தது.
162 பார்களுக்கு ஏலம்
இதையடுத்து 162 பார்களுக்கு டெண்டர் விடப்பட்டது. இதற்கான ஏலத்தொகை கடந்த இரண்டு ஆண்டில் இல்லாத அளவு்க்கு 3 மடங்கு உயர்ந்து விட்டது. இதனால் பார் ஏலத்தை எடுக்க பலர் முன்வரவில்லை.
114 கடைகளுக்கு மட்டுமே பார்கள்
மொத்தம் 114 கடைகளுக்கு மட்டுமே டெண்டர் தொகை செலுத்தப்பட்டு பார்கள் செயல்பட்டு வருகின்றன. ஏலத்தை எடுக்க பலர் முன் வராததால் பாதி கடைகள் அடைக்கப்பட்டு கிடக்கின்றன.
கல்யாண மண்டபத்தோடு கூடிய பார்
புளியங்குடி-தென்காசி திருமண மண்டபம் அருகே உள்ள டாஸ்மாக் பார் கடந்த ஆண்டு ரூ.65 ஆயிரத்திற்கு ஏலம் போனது. தற்போது அதற்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இதை ஏலம் எடுக்க யாரும் முன்வரவிலலை. இதனால் இங்குள்ள பார் மூடப்பட்டு கிடக்கின்றது.
"ஆஃப்" பார்கள் மட்டுமே
பார் நடத்துவதற்கான ஏலத்தொகை பல மடங்கு அதிகரித்து கிடப்பதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 228 டாஸ்மாக் கடைகளில் 50 சதவீத அளவுக்கு மட்டுமே பார்கள் இயங்கி வருகின்றன. மீதமுள்ள கடைகளில் பார் வசதி இல்லை.
கிடைக்கும் இடத்தில் குடிக்கும் அவலம்
இதன் காரணமாக குடிமகன்கள் பஸ் நிறுத்தம், சாலை ஓரம் ஆகியவற்றை திறந்தவெளி பாராக மாற்றி வருகின்றனர்.
முகம் சுளிக்கும் பெண்கள்
இதனால் பயணிகள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சுப்பு என்ன சொல்றாருன்னா...
இதுகுறித்து டாஸ்மாக் மேலாளர் மங்களசுப்பிரமணியன் தெரிவிக்கையில், தறபோது 114 பார்கள் செயல்பட்டு வருகின்றன. 48 பார்களுக்கு இன்னும் பணம் செலுத்தவில்லை. கூடிய சீக்கிரம் பணம் கட்டினால் பார்கள் இயஙகும். இல்லையென்றால் அடுத்த டெண்டரில் அவற்றுக்கும் சேர்நது ஏலம் நடக்கும் என தெரிவித்தார்.