3 நாள் லீவ்…. டாஸ்மாக் கடையை மொய்க்கும் ‘குடி’மகன்கள்
ஆனால் டாஸ்மாக் கடைகளில் என்றைக்கும் திருவிழா கோலம்தான். அதுவும் தேர்தல் திருவிழா வந்துவிட்டதால் கையில் பணப்புழக்கம் அதிகமாகவே இருக்கிறது.
இந்த நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூன்றுநாட்கள் அடைக்கப்பட உள்ளதால் பதறிப்போன குடிமகன்கள் மொத்தம் மொத்தமாக பாட்டில்கள் அள்ளிச்செல்லத் தொடங்கியுள்ளனர்.
26000 கோடி வருவாய்
தமிழ்நாட்டிற்கு வரியின் மூலம் கிடைக்கும் வருவாயை விட குடியின் மூலம் கிடைக்கும் வருவாய்தான் அதிகம். இந்த நிதியாண்டு மட்டும் டாஸ்மாக் கடைகள் மூலம் 26,295 கோடி ரூபாய் கிடைப்பதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிபரம்.
தேர்தலுக்கு லீவ்
காந்தி ஜெயந்தி, வள்ளலார் தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். லோக்சபா தேர்தல் வியாழக்கிழமை நடைபெற உள்ளதால், நாளை செவ்வாய்கிழமை முதல் வியாழக்கிழமை நள்ளிரவு வரை டாஸ்மாக் கடைகள் விடுமுறை விடப்பட உள்ளது.
தேர்தல் ஆணையம் கண்காணிப்பு
மது விற்பனைக்கு தடை விதித்துள்ள தேர்தல் ஆணையம் கள்ளத்தனமாக மதுவிற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. மொத்தமாக மது வாங்குபவர்களையும் கண்காணித்து வருகிறது.
குடிக்காம இருக்க முடியாது
3 நாட்கள் தொடர் விடுமுறையால் அதிர்ச்சியடைந்துள்ள ‘குடி'மகன்கள், இன்று காலை முதலே டாஸ்மாக்கடைகளை முற்றுகையிடத் தொடங்கிவிட்டனர்.
ஆளுக்கு 4 பாட்டில் அள்ளு
கையில் பணம் தாராளமாக இருப்பதால் ஆளுக்கு 4 பாட்டில் என அள்ளிச் செல்கின்றனர் குடிமகன்கள்.
ஏன் இப்படி?
மொத்தமாக பாட்டில்களை வாங்கிச் செல்வது ஏன் என்று கேட்டபோது.... தினசரி ஒருபாட்டில் வீதம், விடுமுறை நாட்களுக்கும் சேர்த்து வாங்கிச் செல்வதாக கூறுகின்றனர்.
ஆதரவும் எதிர்ப்பும்
டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மது எதிர்ப்பாளர்கள் ஆதரவு தெரிவித்தாலும், மது பிரியர்கள் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். அண்டை மாநிலங்களில் இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை விடப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகளால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கூறுகின்றனர் பார் உரிமையாளர்கள். அண்டை மாநிலமான ஆந்திரா, புதுச்சேரியில் இருந்து கள்ளத்தனமாக மது பாட்டில்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.