ஒரு பணியிடம் கூட காலியில்லை... நெல்லை, தூத்துக்குடி உள்பட 9 மாவட்ட இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி!
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி உள்பட 9 மாவட்டங்களில் இடை நிலை ஆசிரியர்கள் பணியிடம் ஒன்று கூட இல்லாததால் பணியிட மாற்ற கலந்தாய்வுக்காக காத்துள்ள ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் என 14700 ஆசிரியர்கள் நியமனத்திற்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக முதுநிலை ஆசிரியர் கலந்தாய்வும், இரண்டாவது கட்டமாக இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வும் நடந்தது. 3வது கட்டமாக பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பணிக்கும் உள் மாவட்டத்தில் முதல் நாளும், வெளி மாவட்டத்தில் இரண்டாம் நாளும் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் முதல்கட்டமாக 1685 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று கலந்தாய்வில் அழைக்கப்பட்டவர்கள், அவர்களின் முகவரி அடங்கிய மாவட்டத்திற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், உள்பட 9 மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடமே இல்லை. இதனால் நாளையும், நாளை மறுநாளும் நடக்க இருந்த கலந்தாயவுக்கு யாரும் வரவேண்டாம் என தொடக்க கல்வி துறை அறிவித்துள்ளது. இதனால் இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சியில் திகைத்து போய் உள்ளனர்.