விழா அழைப்பிதழில் திமுக வேட்பாளர் பெயர்... கோயில் அதிகாரியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு
காரைக்கால்: கோவில் விழா அழைப்பிதழில் திமுக வேட்பாளர் பெயரை அச்சிட்டு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கோவில் அதிகாரியை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 4ம் தேதி காரைக்கால் ஸ்ரீ கயிலாசநாதர் கோவில் பிரமோற்சவ விழா தொடங்கியது. இந்த விழாவுக்கான பத்திரிக்கையை கோவில் சார்பில் தனி அதிகாரி ஆசைதம்பி தயார் செய்து அனைவருக்கும் வழங்கினார்.
அந்த பத்திரிக்கையில், கோவில் 12 ம் நாள் நிகழ்ச்சியாக வரும் ஏப்ரல் 15 ம் தேதி தெற்ப உற்சவம் விழா நடைபெறும் என்றும், அதில், தேர் வடிவமைப்பு என்ற இடத்தில் ஏ.எம்.எச்.நாஜிம் என்றும் அச்சிடப்பட்டிருந்தது.
இது குறித்து, மாநில பாஜக செயலாளர் அருள்முருகன், என்.ஆர் காங்கிரஸ் பேரவை தலைவர் சுரேஷ் ஆகியோர், கோவில் விழாவில் வேட்பாளர் பெயரை அச்சிட்டு விளம்பரம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டினர்.
மேலும், இந்த தவறு செய்த கோவில் தனி அதிகாரி ஆசைதம்பி மீது உடனே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் துறையில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து மாவட்ட தேர்தல்துறை விசாரணை நடத்தியது. இதில் கோவில் தனி அதிகாரி ஆசைதம்பி திமுக வேட்பாளர் நாஜிம்க்கு ஆதரவாக செயல்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து, தேர்தல் துறை உத்தரவின் பேரில், புதுச்சேரி மாநில இந்து அறநிலைத்துறை, கோவில் தனி அதிகாரி பதவியை, கோவில்கள் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீராசாமியிடம் ஒப்படைத்துள்ளது.
மேலும், தேர்தல் துறையிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை இந்த பதவியை ராஜராஜன் வீராசாமியே வகிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.