சென்னையில் சிகிச்சை பெற்ற பன்னா இஸ்மாயில் மீண்டும் சிறையில் அடைப்பு
இந்து முன்னணி பா.ஜ.க. பிரமுகர்கள் படுகொலை வழக்கில் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
புத்தூரில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த போது துப்பாக்கி சூட்டில் குண்டுபாய்ந்து பன்னா இஸ்மாயில் படுகாயம் அடைந்தார். சென்னை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து தகவல் போலீஸ் தரப்பில் கூறுகையில், "தமிழகத்தில் இந்து இயக்கத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை கடந்த அக்டோபர் மாதம் கைது செய்தனர். அப்போது தீவிரவாதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பன்னா இஸ்மாயிலின் வயிற்றில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து அவர் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு துப்பாக்கி தோட்டா அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து உடல்நிலை தேறிய பன்னா இஸ்மாயில் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவனது உடல்நிலை மோசமானது. அப்போது வேலூர் அரசு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பன்னா இஸ்மாயிலுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில் பன்னா இஸ்மாயிலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக வேலூர் சிறையில் இருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
அங்கு அவருக்கு புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.அதன் பின்னர் அவர் மீண்டும் வேலூர் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
பன்னா இஸ்மாயில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ சோதனை செய்யப்பட்ட பின்னர் நேற்று இரவு மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.