தை அமாவாசை: ராமேஸ்வரம், கன்னியாகுமரி கோவில்களில் சிறப்பு பூஜைகள்
ராமேஸ்வரம்: தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராமேஸ்வரத்தில் புனித நீராடும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக நாளைய தினம் பகல் முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற புண்ணிய நாட்களில் முக்கிய புனித தலங்களில் தீர்த்தமாடி, தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபடுவது இந்துக்களின் வழக்கம். புனித தீர்த்த தலங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் பாவங்கள் போய் புண்ணியம் கிடைக்கும் என்பதால் இந்நாட்களில் அதிகளவில் பக்தர்கள் புனித நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நாளை (20ம் தேதி) அமாவாசை நாள் என்பதால் ராமேஸ்வரத்தில் புனித நீராடும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக அன்றைய தினம் பகல் முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும்.
ராமநாதசுவாமி கோயிலில் சாதாரண நாட்களில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோயில் நடை உச்சிக்கால பூஜைக்குப்பின் பகல் ஒரு மணிக்கு சாத்தப்பட்டு, மீண்டும் 3 மணிக்கு திறந்து இரவு அர்த்தஜாம பூஜை முடிந்து 9 மணிக்கு கோயில் நடை அடைப்பது வழக்கம்.
செவ்வாய்கிழமை தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் புனித நீராடி சுவாதி தரிசனம் செய்வார்கள் என்பதால் அன்று அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்படும் கோயில் நடை வெள்ளிரத உலா முடிந்தபின் இரவு 10 மணிக்குமேல் அடைக்கப்படும்.
இதனால் அன்று பகல் முழுவதும் பக்தர்கள் தடையில்லாமல் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்ய முடியும்.
கன்னியாகுமரி கோவிலில்
புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தை அமாவாசை விழா வெகு விமரிசையாக நடைபெறுவது செவ்வாய்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, உசபூஜை, நிவேத்ய பூஜை, ஸ்ரீபலி, உச்சிகால பூஜை உள்ளிட்டவை சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க கவசம் மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனிதநீராடி தங்கள் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்து தர்ப்பனம் செய்வார்கள். இதற்காக அதிகாலை 4.30 மணிக்கு வடக்கு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர்.
பக்தர்கள் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட உள்ளது. மேலும் பக்தர்கள் தரிசனத்துக்காக கோயில் நடை பிற்பகல் 1 மணி வரை திறந்திருக்கும்.
பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் வீதியுலா வருதல், இரவு 10 மணிக்கு திரிவேணி சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு ஆகியவை நடைபெறும். இரவு 10.30 மணிக்கு கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்வு நடைபெறும். பின்னர் அம்மன் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தை மூன்று முறை வலம் வருதல் நடைபெறும். தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு, அத்தாளபூஜை, ஏகாந்த தீபாராதனை நடைபெறும்.