சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பேச எதிர்கட்சியினருக்கு அனுமதியில்லை: மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சட்டப் பேரவையில் விமர்சிக்கிறார்கள். அதற்கு பதில் சொல்லும்போது பேச அனுமதிப்பது இல்லை. அவையை விட்டே வெளியேற்றுகிறார்கள் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. சார்பில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புரசைவாக்கம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள லட்சுமி மஹாலில் இன்று நடைபெற்றது.
முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 2014 இஸ்லாமியர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார். ஏழைகளுக்கு இலவச வேட்டி-சேலை, 2 கிலோ அரிசி, சர்க்கரை, 10 இஸ்லாமிய பெண்களுக்கு தையல் எந்திரம் போன்றவற்றை வழங்கிய பின்னர் அவர் பேசியதாவது:
விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியபோது, ‘'சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் பற்றி பேச முடியவில்லை. தி.மு.க. தலைவர் கலைஞர் ஐந்து முறை முதல்வராக இருந்துள்ளார். ஒருமுறை கூட தேர்தலில் அவர் தோற்றது இல்லை.
மத்தியில் அமைந்த ஆட்சிகளில் முக்கிய பங்காற்றி உள்ளார். 75 ஆண்டுகள் பொது வாழ்வில் இருக்கிறார். அவரை பற்றி சட்ட மன்றத்தில் விமர்சிக்கிறார்கள். அதற்கு பதில் சொல்லும்போது பேச அனுமதிப்பது இல்லை. அவையை விட்டே வெளியேற்றுகிறார்கள்.
தே.மு.தி.க., காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் எங்களை சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கும்படி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளன. அதன் மீது எந்த பதிலும் இல்லை. எங்களை அனுமதிக்க கோரிய கட்சிகளுக்கு நன்றி.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எங்களின் மக்கள் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதற்கு இங்கு நடைபெறும் விழா சாட்சியாக இருக்கிறது.
தி.மு.க. ஆட்சியில்தான் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப் பட்டது.
மிலாதுநபிக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. உருது மொழி பேசுவோர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். காயிதே மில்லத் மணி மண்டபம் கட்ட ரூ.58 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. உமறு புலவருக்கு மணிமண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது. சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக தி.மு.க. இருக்கிறது''என்று தெரிவித்தார்.