மயில் மீது மோதிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தம்: சென்னை வந்தடைவதில் தாமதம்
திண்டுக்கல்: மதுரையில் இருந்து சென்னை சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில், திண்டுக்கல்-திருச்சி நடுவே மயில் மீது மோதியதால் இன்ஜின் பழுதானது. இதனால் மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டு ரயில் கிளம்பியுள்ளது. சென்னை, எழும்பூருக்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாக ரயில் வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பகல் நேர ரயில்
மதுரையில் இருந்து சென்னைக்கு தினசரி காலை 7 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 12636) புறப்படுவது வழக்கம். மதியம் 2.40 மணிக்கு ரயில், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றடையும். திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
திண்டுக்கல்-திருச்சி நடுவே
இன்று காலை 8.05க்கு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தை வந்தடைந்த ரயில், அதன்பிறகு, சென்னை நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. தாமரைப்பாடி-வடமதுரை இடைப்பட்ட பகுதியில் சென்றபோது பறந்து வந்த மயில் ஒன்று எதிர்பாராத விதமாக ரயில் இன்ஜினில் சிக்கியது. அந்த மயில் வெளியே வரமுடியாமல் இன்ஜினின் விசிறியில் சிக்கியதால் அது பழுதானது.
மதுரையில் இருந்து மாற்று இன்ஜின்
எனவே ரெயில் வடமதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. நீண்டநேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மதுரையில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு வர ஏற்பாடு செய்தனர். எனவே சுமார் இரண்டரை மணி நேர தாமதமாக ரயில் புறப்பட்டது. சென்னைக்கு 4 மணியளவில் ரயில் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் கதையாகிவிட்டது
இதனிடையே மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில்களின் இன்ஜின்கள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்றும் குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் பெருமாள்கோவில்பட்டி கரடுகளுக்கு இடையே வந்தபோது இன்ஜின் கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. அதனை தொடர்ந்து மதுரையில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.
புகை கிளம்பியதால் பீதி
சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று வந்த வைகை எக்ஸ்பிரஸ் வடமதுரை-அய்யலூர் மலைகளுக்கு இடையே வந்தபோது, ஏ.சி பெட்டி அடியில் உள்ள சக்கரத்தில் ஏற்பட்ட உராய்வால் புகை கிளம்பியுள்ளது. அதிர்ச்சியடைந்த பயணிகள் அபாய சங்கிலி இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் கோளாரை சீர் செய்ததையடுத்து சுமார் 50 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.