லோக்சபா தேர்தலில் எனக்கு எதிராக சதி செய்துவிட்டனர்: ஆ.ராசா!
கோவை: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு குற்றச்சாட்டில், தி.மு.க.வின் மீதான களங்கம் வருகின்ற மார்ச் மாதத்திற்குள் நீங்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் எனக்கு எதிராக சதி நடைபெற்றுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரும், தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலருமான ஆ.ராசா உதகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ''2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் தீர்ப்பு வெளியாகிவிடும் என்றார்.
களங்கம் நீங்கும்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு குற்றச்சாட்டில் தி.மு.க.வின் மீதான களங்கம் நீங்கும். இதன்மூலம், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை தி.மு.க. குற்றச்சாட்டுகளின்றி எதிர்கொள்ளும். அப்போது தேர்தல் முடிவுகளும் மாறிவிடும் என்று ராசா கூறினார்.
மோடி அலை
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, மோடி அலை வீசியதால், பா.ஜ.க. பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
திமுக – காங்கிரஸ் கூட்டணி
அத்துடன் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காததும், காங்கிரஸ் கட்சிக்கு எதிரானதாக அமைந்துவிட்டது.
அந்த தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைந்திருந்தாலும், இதே தோல்வி தான் ஏற்பட்டிருக்கும்.
சதி செய்த அதிமுக
ஆனால், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிட்டிருந்தால் நான் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்பேன். எனக்கு எதிராக சதி செய்யப்பட்டு விட்டது" என்றார்.