அடகுக் கடை லாக்கரையே அலேக்காய் தூக்கிச் சென்ற திருடர்கள்!
சென்னை: சோளிங்கரில் அடகுக் கடையை உடைத்த திருடர்கள் நகை, பணத்தை லாக்கருடன் தூக்கிச் சென்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோளிங்கர் அடுத்த ரெண்டாடியை சேர்ந்தவர் சிவா . இவர் தனது வீட்டிற்கு அருகேயே அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றவர் நேற்று காலையில் கடையைத் திறக்க வந்தார்.
அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த லாக்கரை காணவில்லை.
அந்த லாக்கரில் ரூபாய் 2 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் நகைகள் இருந்ததாகவும் மேலும் கடையில் இருந்த 4 செல்போன்களையும் மர்ம திருடர்கள் திருடிச் சென்றதாக அவர் கூறினார்.
இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் சிவா புகார் கொடுக்க சென்றார். அப்போது ரெண்டாடியை அடுத்த அரைக் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கழினியில் அந்த லாக்கர் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக சிவா சோளிங்கர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட வந்த திருடர்கள் லாக்கரையே அலுங்காமல், குலுங்காமல் தூக்கிச் சென்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.