மன உளைச்சல் காரணமாக மாணவிகள் மீது ஆசிட் வீசினேன்: கைதான சைக்கோ வாலிபர் பகீர் வாக்குமூலம்
மதுரை: பெண்கள் சிலர் தரக்குறைவாக திட்டியதால் மன உளைச்சலுடன் காணப்பட்டதாகவும், அதனால் தான் மாணவிகள் மீது ஆசிட் வீசியதாகவும் திருமங்கலம் ஆசிட் வீச்சு சம்பவத்தில் கைது செய்யப் பட்ட வாலிபர், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கடந்த வாரம் கல்லூரியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த மீனா என்ற மாணவி மீது மர்மநபர் ஒருவர் ஆசிட் வீசித் தாக்குதல் நடத்தினார். இத்தாக்குதலை தடுக்க முயன்றபோது, அவரது தோழி அங்காளஈஸ்வரியும் பலத்த காயமடைந்தார்.
பொதுமக்கள் பிடிப்பதற்கு முன்னதாக ஆசிட் வீசிய நபர் தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த மாணவிகள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், குற்றவாளியைப் பற்றிய எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கும் ஆசிட் வீசிய நபர் குறித்த விவரம் தெரியவில்லை. இதனால் போலீசார் பெரும் குழப்பத்தில் தவித்தனர்.
இந்நிலையில், திருமங்கலம் சுங்குவார்பட்டியில் பலசரக்கு கடை வைத்திருக்கும் சுதாகர் என்பவர் தன் மகன் சங்கரநாராயணன் தான் மாணவிகள் மீது ஆசிட் ஊற்றியது எனக் கூறி, அவரைப் போலீசில் ஒப்படைத்தார்.
கையில் தீக்காயத்துடன் கைது செய்யப்பட்ட சங்கரநாராயணன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். செப்டம்பர் 30ந்தேதி வரை மதுரை அரசு மருத்துவமனையில் போலீஸ் காவலில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட சங்கரநாராயணன் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெண் ஒருவரைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்படவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவராகக் கூறப்படும் சங்கரநாராயணன், மாணவிகள் மீது ஆசிட் ஊற்றியதற்கான காரணமாக போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது :-
சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் அப்பகுதியில் நடந்து செல்லும்போது என்னை சில பெண்கள் தரக்குறைவாக பேசினர். அதனால் நான் மனஉளைச்சலுடன் காணப்பட்டேன். இந்நிலையில், சம்பவத்தன்று அருகிலிருந்த கடையில் ஒரு ரூபாய் கொடுத்து காலி பாட்டிலை வாங்கினேன். அதில் சித்தப்பா வாங்கச் சொன்னதாகக் கூறி ஆசிட் வாங்கினேன். தெரிந்த கடை என்பதால் என்னை சந்தேகிக்காமல் கடைக்காரர் ஆசிட் கொடுத்தார்.
ஆசிட் பாட்டிலுடன் நடந்து வந்து கொண்டிருந்த போது, எதிரே மாணவிகள் நடந்து வந்து கொண்டிருந்தனர். திடீர் மனக்குழப்பத்தில் மாணவிகள் மீது ஆசிட்டை ஊற்றி விட்டேன். என்னை மற்றவர்கள் பிடிப்பதற்கு முன்னதாக அருகிலிருந்த தண்டவாளப் பகுதியில் சென்று பதுங்கிக் கொண்டேன்.
ஆசிட் தாக்குதலின் போது என் கையிலும் காயம் ஏற்பட்டது. தலைமறைவாக இருந்த நான் அக்காயங்களுக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாததால் ரணம் அதிகமானது. இதனால், சில நாட்களுக்கு முன்னர் வீட்டிற்குச் சென்றேன். என் கையிலிருந்த காயத்தின் மூலம் சந்தேகமடைந்த என் அப்பா என்னைப் போலீசில் ஒப்படைத்து விட்டார்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.