மாணவிகள் மீது ஆசிட் வீச்சு - திருமங்கலம் அருகே ஒருவர் சிக்கினார்
மதுரை திருமங்கலத்தில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் படித்து வரும் மீனா மற்றும் அங்காள ஈஸ்வரி ஆகிய மாணவிகள் 12ம் தேதி பிற்பகலில் தங்களது வகுப்புகள் முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மீனா மீது திடீரென ஆசிட் ஊற்றினர். இதைத் தடுக்க முயன்ற அங்காள ஈஸ்வரி மீதும் அவர்கள் திராவகத்தை ஊற்றி விட்டு பறந்து விட்டனர். அமிலம் பட்டதால் இரு மாணவிகளும் துடித்து தரையில் புரண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த அராஜக சம்பவம் குறித்து திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தற்போது திருமங்கலம் அருகே ஒருவரைப் போலீஸார் பிடித்துள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.