சென்னை: வாக்களிக்க விடுப்பு வழங்காத 3 ஐடி நிறுவனங்களில் ரெய்ட், 3500 ஊழியர்கள் வெளியேற்றம்
சென்னை : தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை மீறி இன்று விடுப்பு வழங்காமல் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்திய மூன்று தனியார் நிறுவனங்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
அனைவரும் வாக்களிக்கும் வகையில் லோக்சபா தேர்தல் தினமான இன்று ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் எனவும், அதனை மீறுபவர்களுக்கு தக்க தண்டனை அளிக்கப் படும் எனவும் ஏற்கனவே தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது. தமிழக அரசும் அதனை வலியுறுத்தி இன்று பொது விடுமுறை அளித்திருந்தது.
ஆனால், சோழிங்கநல்லூரில் இயக்கி வரும் சில ஐ.டி நிறுவனங்கள் இன்றும் ஊழியர்களை பணிக்கு அழைத்திருப்பதாகத் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சுமார் 3500 ஊழியர்கள் பணியில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. உடனடியாக ஊழியர்களை வெளியேற்றிய தேர்தல் ஆணையம், மூன்று ஐ.டி. நிறுவனங்களுக்கும் பூட்டுப் போட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை மீறியதாக ஐ.டி. நிறுவனங்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.