முதல்ல இங்கிட்டு போகலாம்.. அப்புறமா எங்கிட்டாச்சும் போகலாம்.. ஓகே.வா...?!
சென்னை: பாஜகவின் பரமக்குடி செயற்குழுக் கூட்டத்தில் வரும் லோக்சபா தேரத்லில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து ஆளாளுக்கு கருத்து தெரிவித்தனராம். கடைசியில் முதலில் மக்களைப் போய்ப் பார்ப்போம். அதன் பிறகு யாருடனாவது கூட்டணி வைப்போம் என்ற முடிவை எடுத்தனராம்.
படு வித்தியாசமாக மாநில பாஜக செயற்குழுக் கூட்டத்தை பரமக்குடியில் வைத்தனர்.
தலைநகரிலும் வைக்காமல், முக்கிய நகரங்களிலும் வைக்காமல், பரமக்குடியில் வைத்தது பலரை வியப்பில் ஆழ்த்தியது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் இக்கூட்டத்தில் சீரியஸாகவே பல விஷயங்களை அலசினராம் பாஜக நிர்வாகிகள்.
முதல்ல கட்சியை பலப்படுத்தனும்
இக்கூட்டத்தில் தமிழகத்தில் பாஜகவை பலம் வாய்ந்ததாக மாற்ற என்ன செய்யலாம் என்று சீரியஸாக விவாதித்தனராம்.
அடுத்து கூட்டணி
அதற்கு அடுத்து கூட்டணி குறித்து முக்கியமாக விவாதித்துள்ளனர். அதாவது அதிமுகவுடன் சேரலாமா அல்லது திமுகவுடன் போகலாமா என்பது குறித்து.
அதிமுகவுடன் சேர பலருக்கு ஆசை
இக்கூட்டத்தில் பேசிய பலரும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ஆசைப்பட்டனராம். அதற்கான காரணத்தையும் அவர்கள் கூறினார்களாம்.
ஆனா, அம்மா சும்மா இருக்காங்களேப்பா...
ஆனால் ஜெயலலிதா அமைதியாக இருக்கிறாரே, ஆர்வம் காட்ட மாட்டேன் என்கிறாரே என்று எதிர்த் தரப்பினர் கேட்டபோது ஆசைப்பட்டவர்கள் விளக்க முடியாமல் கமுக்கமாகி விட்டனராம்.
அப்படீன்னா திமுக...
இதையடுத்து அதிமுகவை விரும்பாத தரப்பு, திமுகவுடன் சேரலாம். அதற்கான முயற்சிகளை எடுக்கலாம் என்றதாம். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், திமுகவுடன் முரண்பாடுகள் இருந்தாலும் கூட அவர்களை நாம் முழுமையாக நம்பலாம் என்பதாம்.
பேசாம நாமளே கூட்டணியை உருவாக்கிட்ட்ட்ட்ட்டா..?
இந்த ரெண்டு குரூப்பையும் சாராத சிலர், பேசாமல் நம் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கிடலாமே என்று ஆலோசனை கூறினார்களாம்.
விஜயகாந்த் கட்சியோட
இன்னும் சிலர் தேமுதிகவுடன் கூட்டணி குறித்தும் பேசினார்களாம். பாமக குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.
நிதானம்.. நிதானம்...
இன்னொரு குரூப்போ... மோடி வருகை, தமிழக மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ள ஆதரவையும் வரவேற்பையும் வாக்குகளாக மாற்ற, கட்சியை இன்னும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். யாரும் நம்மை வைத்து பலன் அடைந்துவிடக் கூடாது. கூட்டணி குறித்த அவசரமே வெளியில் காட்டக் கூடாது.
முதல்ல மக்களைப் பார்ப்போம்.. வாங்க
எனவே, கூட்டணித் தலைவர்கள் மனநிலையை அறியும் முன், மக்கள் மனநிலையை முதலில் அறியலாம். அதன் பின் இன்னும் தெளிவாக ஒரு முடிவுக்கு வரலாம் என்றார்களாம்.
இதையடுத்தே தற்போது முதலில் பாதயாத்திரையை தொடங்கியுள்ளதாம் பாஜக. தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணியை இறுதி செய்வார்களாம்.