சுகாதார அமைச்சர் உறுதி: பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
இளங்கலை பயிற்சி மருத்துவர்களுக்கு தற்போது மாதந்தோறும் ரூ.8,200 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதனை ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரியும். முதுகலை பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரூ.17,400 ஊக்கத்தொகையை ரூ.40,000 ஆக உயர்த்த வேண்டும் என்பது பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கையாகும்.
இதனை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் கடந்த 17-ம் தேதி ஈடுபட்டனர். இது தொடர்பாக அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்காததால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பயிற்சி மருத்துவர்கள் ஜூலை 28 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, மதுரை, கோவை என தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த போராட்டம் குறித்து பயிற்சி மருத்துவர்கள் சங்கத் தலைவர் கவின் குமார் கூறுகையில்:
"மாநிலம் முழுவதும் 3500 பயிற்சி மருத்துவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்களது நியாமான கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காததால் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்" என்றார்.
{ventuno}
இந்த நிலையில், ஆகஸ்ட் 11-ல் சட்டப்பேரவையில், ஊக்கத்தொகை உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று சுகாதார அமைச்சர், போராட்டக்குழுவினரிடம் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பயிற்சி மருத்துவர்கள் மேற்கொண்ட போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.