சட்டம் ஒழுங்கு பராமரிப்பை உறுதி செய்யுங்கள்: அரசு அதிகாரிகளுக்கு ஆளுநர் 'அட்வைஸ்'
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஆளுநர் ரோசய்யா அறிவுறுத்தியுள்ளார்.
பெங்களூரில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதான சொத்து வழக்கின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக, மாநில அரசின் உயரதிகாரிகள் ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்துப் பேசினர்.
தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், டிஜிபி ராமானுஜம், சென்னை மாநகர போலீஸ் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ் ஆகியோர் ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சனிக்கிழமை ஆங்காங்கே நடைபெற்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாகவும், அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநரிடம் அதிகாரிகள் விளக்கிக் கூறினர். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பை உறுதி செய்திட வேண்டும் எனவும், வேறெந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆளுநர் மாளிகையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.