செப்.27 ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு: தயாராகும் இரு மாநில போலீஸ்
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், தமிழகம், கர்நாடகா என இரு மாநில போலீஸ் உயர் அதிகாரிகளும் சந்தித்து, தீர்ப்பு நாளின் பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆலோசித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி நிறைவடைந்தது. செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் சார்பில், அவரது வழக்கறிஞர் பன்னீர் செல்வம் கடந்த 15ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில், "விடுதலைப் புலிகள், முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளால் ஜெயலலிதா உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்கு மாற்ற வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, வழக்கு விசாரணையை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி டி'குன்ஹா உத்தரவிட்டார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக, பெங்களூர் சிறப்பு நீதி மன்றம் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் தீர்ர்ப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகம், கர்நாடகா என இரு மாநில போலீஸ் உயர் அதிகாரிகளும் சென்னையில் சந்தித்து தீர்ப்பு நாளின் பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆலோசித்துள்ளனர்.
தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் ஏற்படும் சூழலை எப்படி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தமிழக தரப்பில் இருந்து உளவுப் பிரிவு ஐ.ஜி., பாதுகாப்பு எஸ்.பி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா இசட் பிரிவு பாதுகாப்பு வளையத்தில் வருவதால், அவரது பாதுகாப்பு, அவருக்கு இருக்கும் அச்சுறுத்தல் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தின் அருகே உள்ள காந்தி பவன் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
தீர்ப்பு வழங்கப்படும் இடத்திற்குள் அனுமதி வழங்குவதில் மிகவும் கெடுபடியை கடைபிடிக்கவும், பத்திரிகையாளர்களுக்குக் கூட குறிப்பிட இடம் வரையிலேயே அனுமதி அளிக்கப்படவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கு முடிவு எந்த மாதிரியாக இருந்தாலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியில் கூடுதல் கண்காணிப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.