ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு- மத்திய, மாநில அரசுகள் விழா நடத்த கோரிக்கை!
சென்னை: அலைகடல் மீது பல கலம் செலுத்தி கங்கை வென்று கடாரம் கைப்பற்றிய மாமன்னன் ராஜேந்திர சோழன் அரியணை ஏறி ஆயிரமாவது ஆண்டை மத்திய, மாநில அரசுகள் பெருவிழாவாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழர்களின் பெருமிதமான சோழ வம்சத்தில் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1012ஆம் ஆண்டு இணை அரசராக பொறுப்பேற்றவர் ராஜேந்திர சோழன். பின்னர் 1014 ஆம் ஆண்டு அரசராக கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு முடி சூடி கொண்டார் ராஜேந்திர சோழன்.
கொண்டாடிய மக்கள்
அம்மாமன்னன் அரியணை ஏறி ஆயிரமாவது ஆண்டு இது. இந்த ஆயிரமாவது ஆண்டு விழாவை ராஜேந்திர சோழனின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்து பொதுமக்கள் சிறப்போடு கொண்டாடினர்.
புறக்கணித்த தலைவர்கள்
இந்த விழாவை ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடவில்லை. மாநில அமைச்சர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகளும் பங்கேற்கவில்லை. இது அப்பகுதி மக்களையும் வரலாற்று ஆய்வாளர்களையும் வருத்தமடைய வைத்துள்ளது.
ராஜேந்திர சோழன் கடற்படை
ராஜேந்திர சோழன் மிகப் பெரிய கடற்படையை வைத்திருந்தார். இதனாலேயே இந்திய கடற்படையில் ஒரு கப்பலுக்கு பெயரும் கூட ராஜேந்திரா என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. பின்னாளில் அது சாணக்யா என்றானது.
அபசகுணம்
ராஜராஜனையும் ராஜேந்திரனையும் பொதுமக்கள் கொண்டாடினாலும் பொதுவாக அரசுகளும் கட்சிகளும் 'அபசகுணமாக' பார்ப்பதுதான் தொடர் கதையாகி வருகிறது. சோழர்கள் தொடர்புடைய விழாக்களில் பங்கேற்றால் பதவி பறிபோய்விடும் என்பதுதான் அரசியல் தலைவர்களின் எண்ணமாக இருந்து வருகிறது.
புறக்கணிப்பு
இதனாலேயே ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டை பற்றி அரசுகளும் அரசியல் தலைவர்களும் கண்டு கொள்ளவில்லை. சரி அரசியல்வாதிகள்தான் அப்படி எனில் இலக்கிய கர்த்தாக்கள் ஓரிருவரைத் தவிர பெரும்பாலானோர் இந்த விழாவை கொண்டாட முன்வரவில்லை.. திரைத்துறையினரும் கூட இப்படி பெருமிதத்தை உச்சிமோந்து கொண்டாட தயாராக இல்லை..
தமிழ் மாமன்னன் ராஜேந்திர சோழனை தமிழர்களே கொண்டாட தயாரில்லை என்கிற போது அரசுகள் எப்படி கவனம் செலுத்தும்? என்கின்றனர் கங்கைகொண்டசோழபுரத்துவாசிகள். ஒரு வரலாற்று பெருமிதத்தை வருங்கால தமிழகத்துக்கு உணர்த்த தவறிவிட்டதே தமிழ்ச் சமூகம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
தமிழ் மாமன்னர் ராஜேந்திர சோழனை எப்போதுதான் நம் அரசுகள் கொண்டாடுமோ? என்பதுதான் கங்கைகொண்ட சோழபுரத்து மக்களின் ஏக்கம்.