சு.சுவாமியின் ஆணவத்துக்கு தக்க பாடம் புகட்டுவோம்- தமிழகத்துக்குள் நுழைய முடியாது: வேல்முருகன்
சென்னை: தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடிக்க இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆலோசனை கூறிய சுப்பிரமணியன் சுவாமி தமிழகத்துக்குள் நுழைய முடியாது..அவரது ஆணவத்துக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டு மீனவ உறவுகளின் படகுகளை சிறைபிடிக்க இலங்கை அரசுக்கு தாமே ஆலோசனை வழங்கியதாக தமிழின துரோகி சுப்பிரமணியன் சுவாமி திமிர்த்தனமாக பேட்டி அளித்திருப்பதற்கு எனது மிகக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கைக்கு ஆலோசனை
பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கை சென்ற போது தமிழக மீனவர்களுக்காக பேசினேன். மீனவர்கள், தொழிலாளர்கள் அவர்களை கைது செய்தால் சிறையில் அடைத்து விடுவித்துவிடுங்கள். ஆனால் கப்பல்களை சிறைபிடித்துக் கொள்ளுங்கள். அதன் முதலாளிகள் பணக்காரர்கள்.. மீன் பிடிப்பவர்கள் அதற்குச் சொந்தக்காரர்கள் அல்ல என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவின் ஏகப்பிரதிநிதியா?
மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான மோடி அரசு அமைந்தது முதல் தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமி இந்தியாவின் ஏகப் பிரதிநிதி போல சிங்கள பேரினவாத அரசுடன் கை குலுக்குவதும் அடிக்கடி இலங்கைக்கு சென்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
தமிழர் நலனுக்கு எதிரானவர்..
இலங்கையில் நடைபெற்ற ராணுவக் கருத்தரங்கில் இந்தியாவின் பிரதிநிதியாக போய் கலந்து கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. இவரது ஒவ்வொரு நடவடிக்கையுமே தமிழக நலன்களுக்கும் தமிழர் நலன்களுக்கும் எதிரானதாகவே இருக்கிறது என்பதை ஒவ்வொரு முறையும் சுட்டிக் காட்டி கண்டனம் தெரிவித்து வருகிறோம்.
படகுகளை சிறைபிடிக்க சொல்வதா?
இதன் உச்சபட்சமாக தமிழ்நாட்டு மீனவ உறவுகளின் வாழ்வாதாரமான படகுகளை சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவுக்கு ஆலோசனை வழங்கிவிட்டு அதை பகிரங்கமாக திமிர்த்தனமாக பேட்டியும் கொடுத்திருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. தமிழக மீனவ உறவுகளின் படகுகளுக்கும் பன்னாட்டு பெருநிறுவனங்களின் கப்பல்களுக்குமான அடிப்படை வேறுபாடு கூட தெரியாமல் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தலையிட்டு தமிழினத்துக்கு துரோகத்தை இழைத்திருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
வன்மையாக கண்டிக்கிறேன்
இந்தியாவில் ராஜபக்சேவின் பிரதிநிதியைப் போலவே அகந்தையாக ஆணவமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சுப்பிரமணியன் சுவாமியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழக தீர்மானத்துக்கு எதிராக...
போர்க்குற்றம் புரிந்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதற்கு எதிராக சிங்களப் பேரினவாத அரசுடன் தொடர்ந்தும் கை குலுக்கிக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
யார் இந்த சுவாமி?
இந்த சுப்பிரமணியன் சுவாமி இந்தியாவின் வெளியுறவு அமைச்சரா? இந்தியாவின் வெளியுறவுத் துறை பிரதிநிதியா? யார் இந்த சுப்பிரமணியன் சுவாமி? இவர் என்ன இந்த தேசத்தின் அறிவிக்கப்படாத பிரதமரா? யார் இந்த அதிகாரத்தை சுப்பிரமணியன் சுவாமிக்கு கொடுத்தது என்பதை பாரதிய ஜனதா கட்சியும் மத்திய அரசும் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
தக்க பாடம் புகட்டுவோம்..
தமிழினத்துக்குத் துரோகம் செய்கிற உலகத் தமிழினத்தையே சிங்களவனிடம் காட்டிக் கொடுக்கும் சுப்பிரமணியன் சுவாமியின் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படாவிட்டால் இந்த் தமிழினத் துரோகியின் திமிர்த்தனத்துக்கும் ஆணவத்துக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தக்க பாடம் புகட்டும் என்று மிகக் கடுமையாக எச்சரிக்கிறேன்.
இவ்வாறு தி.வேல்முருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன், நெடுமாறன்
இதேபோல் சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பேட்டி இலங்கை அரசாங்கத்தை அசிங்கப்படுத்துவதாக இருக்கிறது; சுப்பிரமணியன் சுவாமி என்கிற தனிநபர் பேச்சைக் கேட்டுத்தான் ஒரு நாட்டின் அதிபர் முடிவெடுக்கிறாரா என்பதை இலங்கை அரசு விளக்க வேண்டும். சுப்பிரமணியன் சுவாமியின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து பாஜக தலைவர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறனும் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
சுப்பிரமணியன் சுவாமியின் பேட்டிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவியும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தும் தாக்குதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியன தொடர்பு குறித்து சுப்பிரமணியன் சுவாமி மீது சந்தேகம் எழுகிறது.
இலங்கையுடன் நெருக்கம்
மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு பதவியேற்றது முதல், இலங்கையுடனான நெருக்கத்தை சுவாமி அதிகப்படுத்தியுள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவிடம் சுப்பிரமணியன் சுவாமி பேசியது மட்டுமின்றி, கொழும்பில் நடைபெற்ற இலங்கை ராணுவக் கருத்தரங்கில் இந்திய பிரதிநிதி போல் சுவாமி பங்கேற்றது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ஆனால் எந்த அடிப்படையில் மத்திய அரசு சுப்பிரமணியன் சுவாமிக்கு இத்தகைய அனுமதியை அளித்தது என்பதை தெரிவிக்கவில்லை.
எப்படி அனுமதி அளித்தார்கள்?
இது பாஜக அரசின் நிர்வாக சீர்கேட்டினை பிரதிபலிக்கிறது. தற்போது தமிழக மீனவர்களின் படகுகளை பிடித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று தான் கூறியதாகவும் அதனையே அவர்கள் செய்வதாகவும் கூறிய சுவாமி, இதற்கு முன்னரும் தமிழக முதல்வர் குறித்த விமர்சன கட்டுரையை தான் சொல்லித்தான் இலங்கை அரசு நீக்கியதாக தெரிவித்திருந்தார். மத்திய அரசின் வெளியுறவுத் துறை கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்களில், தாமாகவே மூக்கை நுழைக்கும் அனுமதியை சுப்பிரமணியன் சுவாமிக்கு மத்திய அரசு எப்படி அனுமதி அளித்தது. இதுகுறித்து மத்திய அரசு விளக்கவேண்டும்.
தமிழினத்துக்கு எதிரானது..
இதேப்போன்று கொழும்பில் ஒரு நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய சுவாமி; இலங்கை-இந்திய உறவுகளில் இருந்து, தமிழ்நாட்டையும், தமிழர் பிரச்சினையையும் நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பேச்சும், அவரது நடவடிக்கையும் முழுக்க முழுக்க தமிழினத்துக்கு எதிரான ஒன்றாகும்.
பாஜகவின் இரட்டை நிலைப்பாடு
தமிழக மீனவர்களுக்கு எதிரான சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து, பாஜகவின் கருத்து அல்ல என்று தமிழக பாஜக தலைவர் தெரிவித்திருந்தாலும், சுப்பிரமணியன் சுவாமி, பாஜகவின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் என்பதை மறந்துவிடக்கூடாது. மேலும் தனது இந்த கருத்துக்கு பாஜக மேலிடம் எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை என்பதை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சுவாமி கூறியிருந்தார். ஆகவே, பாஜகவுக்கு இதில் தொடர்பில்லை என தமிழக தலைவர் கூறுவது, வாக்கு வங்கிக்காக அவர்கள் மேற்க்கொள்ளும் இரட்டை நிலைபாடு என்பதை தெளிவாக காட்டுகின்றன.
மக்கள் கொதித்தெழுவார்கள்
ஆகவே சுப்பிரமணியன் சுவாமியின் தமிழக மீனவர்களுக்கு எதிரான, தமிழினத்துக்கு எதிரான நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்த விளக்கத்தினை தமிழக மக்களுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும். இதுபோன்று தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சுப்பிரமணியன் சுவாமி நிறுத்தாவிட்டால் அவருக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் மக்கள் கொதித்தெழுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு தெகலான் பாகவி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.