சென்னையில் இன்று மாலை அல்லது இரவில் மழை பெய்யலாமாம்
சென்னை: வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் இடியுடன் கூடிய மழையோ அல்லது மழையோ பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம், புதுவையில் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டமாகக் காணப்படும். மாலை அல்லது இரவில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
சனிக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் ராசிபுரம், தளி, செம்பரம்பாக்கத்தில் 70 மி.மீ. மழை பதிவானது. தொழுதூரில் 60 மி.மீ. மழையும், தாம்பரம், திண்டிவனம், சின்னக்கல்லாறு, செஞ்சியில் 50 மி.மீ. மழையும் பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. அதேசமயம், இன்று சென்னையில் காலையிலிருந்து லேசான வெயில் அடித்து வருகிறது.