தமிழகத்தில் அமைதியாக நடந்து முடிந்த லோக்சபா தேர்தல்- 72.83% வாக்குப் பதிவு
சென்னை: தமிழகத்தில் பெரிய அளவில் சண்டைகள், சச்சரவுகள், மோதல்கள் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது லோக்சபா தேர்தல். மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்தது.
இத்தேர்தலில் 72.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
இது கடந்த 2009 தேர்தலை விட சற்றே குறைவாகும். காலையில் விறுவிறுப்பாகவும், பின்னர் பிற்பகலில் சற்று தொய்வையும் பின்னர் மாலையில் படு வேகமான வாக்குப்பதிவையும் தமிழகம் சந்தித்தது.
இன்னும் சில இடங்களில் வாக்குப்பதிவு விபரம் வராததால், முழுமையான விவரம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
ஆரம்பத்திலிருந்தே மக்கள் ஆர்வம்
ஆரம்பத்திலிருந்தே மக்களிடையே வாக்களிக்க பெரும் ஆர்வம் காணப்பட்டது. பல வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு முன்பே வாக்காளர்கள் திரண்டு விட்டனர். பகலில் வெயில் அதிகம் என்பதால் காலையிலேயே வந்து வாக்களிக்க மக்களிடையே ஆர்வம் காணப்பட்டது.
பலத்த பாதுகாப்பு.. நீண்ட கியூ
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்களிப்பு நடந்து வருகிறது. மக்கள் நீண்ட கியூ வரிசையில் பல இடங்களில் காத்திருந்து வாக்குகளைச் செலுத்தினர்.
தலைவர்கள் நடிகர்கள்
அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், நடிகர் நடிகையர் என பல் துறைப் பிரமுகர்களும், முக்கியஸ்தர்களும் காலையிலேயே வந்து வாக்களித்தனர்.
தமிழகம் முழுவதும் 144
முதல் முறையாக லோக்சபா தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்படிருந்த 2,319 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி குடிநீர், கழிவறை, மாற்று திறனாளிகளுக்காக சாய்வுதளம் ஆகிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இடை விடாமல் வாக்குப் பதிவு நடைபெற்றது. வழக்கமாக வாக்குப் பதிவு தொடங்கும் நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாக இந்த முறை வாக்குப் பதிவு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வன்முறை இல்லை
தேரத்லையொட்டி வழக்கமாக நடைபெறும் கலாட்டாக்கள், கலவரங்கள் எதுவும் இடம் பெறவில்லை. ஆங்காங்கே சின்னச் சின்ன மோதல்கள்தான் நடந்தன.
டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு
6 மணிக்கு முன்பே வந்திருந்த வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படும். அதன்படி பல பகுதிகளில் வரிசையில் பலர் காத்திருந்தனர்.
மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை
பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்
வாக்குப்பதிவு முடிந்த மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மெழுகுவர்த்தியின் மூலம் அரக்கினை உருக்கி, அடையாள அட்டை இட்டு சீல் செய்து அனுப்ப துவங்கியுள்ளனர் தேர்தல் சாவடி அதிகாரிகள்.
அண்ணாவிடம் தென் சென்னை.. லயோலாவில் மத்திய சென்னை
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் தென்சென்னை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. மத்திய சென்னை இயந்திரங்கள் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் வைக்கப்பட உள்ளன.