பிறந்தநாள் இரத்ததான முகாம் - ஜெயலலிதாவிடம் கின்னஸ் சாதனை சான்றிதழ் ஒப்படைப்பு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற ரத்ததான முகாம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கான சான்றிதழை கின்னஸ் அமைப்பின் பிரதிநிதி லுசியா, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, வழங்கினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66 வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் ரத்ததான முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த ரத்த தான முகாமினை ஏற்பாடு செய்திருந்தார்.
அதன்படி, கடந்த பிப்ரவரி 14 ம் தேதி அன்று சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் கின்னஸ் சாதனைக்கான ரத்ததான முகாம்கள் நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமில் 53,129 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
இதற்கு முன்பு, 2010 ம் ஆண்டு இந்தியாவின் அரியானா மாநிலத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 43,732 பேர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கியதே கின்னஸ் உலக சாதனையாக கருதப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தற்போது, அந்த சாதனையை முறியடித்து, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாமில் 53,129 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கி கின்னஸ் உலக சாதனையாக கருதப்படுகின்றது.
இந்த கின்னஸ் ரத்தான முகாம் சாதனையை அங்கீகரிக்கும் வகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா-வை, சென்னை தலைமைச் செயலகத்தில், கின்னஸ் அமைப்பு பிரதிநிதி லுசியா சந்தித்து, கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினார். அப்போது போக்குவரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உடன் இருந்தார்.
இந்த கின்னஸ் சாதனை நிகழ்வின் மூலம் அதிமுகவில் உள்ள 4 அணியைவிட ஒருபடி முதல்வரிடம் நற்பெயர் பெற்றுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜியின் இந்த செயலுக்கு முதல்வர் ஜெயலலிதா விரைவில் பெரிய அளவில் ஒரு பதவியை வழங்கப்போவதாக அதிமுக முக்கிய நிர்வாகிகள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
எனினும் கட்டாயப்படுத்தி ரத்த தானம் பெறப்பட்டதாக தமிழகம் முழுவதும் புகார் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.