மொதல்ல நாமெல்லாம் ஒன்று கூடுவோம். அப்புறமா மத்ததைப் பார்க்கலாம்.. ஞானம் பேச்சு!
சென்னை: முதலில் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் தொண்டர்களை ஒருங்கிணைக்க முடியும். கட்சியை மீட்டெடுக்க முடியும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 71வது பிறந்த நாள் இன்று சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. ராஜீவ் காந்தி படத்துக்கு முன்பு கூடி பல்வேறு கோஷ்டிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி டாக்டர் செல்லக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஞானதேசிகன் பேசினார்.
எத்தனையோ நன்மைகள்
அவர் கூறுகையில், இலங்கை தமிழர்களுக்காக ராஜீவ்காந்தி எத்தனையோ நன்மைகள் செய்தார். ஆனால் அவரை விடுதலைப்புலிகள் கொலை செய்துவிட்டனர். தமிழ்நாட்டில் இது நடந்தது. இதனால் தமிழகத்துக்கு களங்கம் ஏற்பட்டது.
ஒன்றுபடுவோம்- மீட்போம்
காங்கிரஸ் கட்சியை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டியது அவசியம். தொணடர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
எதிர்க்கட்சி இல்லாமல் எப்படி
நாடாளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும்போது பிரதான எதிர்க்கட்சி இல்லாமல் இருப்பது சரியல்ல.
மது விலையை உயர்த்தினால் மட்டும் போதுமா
மதுவால் ஏழை-எளிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். மதுவின் விலையை உயர்த்துவதால் குடிப்பவர்கள் எண்ணிக்கை குறையும் என்று சொல்ல முடியாது. பூரண மதுவிலக்கு அவசியம். முழு மதுவிலக்கை கொண்டுவர அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். ஒன்றிணைந்து போராட வேண்டும்.
டிடி பிரச்சினை
டி.டி.மருத்துவக் கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டியது அரசின் கடமை. அந்த மாணவர்களை அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் ஞானதேசிகன்.