சும்மா பேசிக் கொண்டிருந்த ஞானதேசிகனை 'வாட்ஸ் ஆப்' மூலம் ராகுலிடம் போட்டுக் கொடுத்த எதிர் கோஷ்டி!
சென்னை: சாதாரணமான முறையில் ராகுல் காந்தி குறித்து கட்சியினர் மத்தியில் பேசிக் கொண்டிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனின் பேச்சை ரகசியமாக மொபைல் போனில் பதிவு செய்து அதை வாட்ஸ் ஆப் மூலம் ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்து மாட்டி விட்டுள்ளனர் எதிர்க் கோஷ்டியினர்.
காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசல் வரலாறில் இதுதான் இப்போது லேட்டஸ்டாக உலவி வரும் ரகளைச் செய்தியாகும்.
அந்தப் பேச்சில் ராகுல் காந்தி குறித்து எதார்த்தமாக சில கருத்துக்களை வெளிப்படையாக ஞானதேசிகன் பேயிருந்ததாக கூறப்படுகிறது. இதுதான் இப்போது வாசன் தரப்புக்கு பெரும் சிக்கலாகியுள்ளது. இந்தப் பேச்சால் ராகுல் காந்தி செம டென்ஷனாக இருப்பதாக கூறுகிறார்கள்.
பெரிய தம்பி.. சின்னத் தம்பி..
காங்கிரஸ் கட்சியின் பெரிய தம்பியாக அதாவது பெரிய கோஷ்டியாக இருப்பது ஜி.கே.வாசன் கோஷ்டிதான். அடுத்து ப.சிதம்பரம் கோஷ்டி, பிறகு அப்படியே நிறைய கோஷ்டிகள் இருக்கின்றன. இதில் தொண்டர்கள் அதிகம் இருப்பது வாசன் கோஷ்டிக்குத்தான்.
தலைவர் பதவி ஆட்டம்
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஞானதேசிகன் அகற்றப்படலாம் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் மாற்றுத் தலைவராக யாரைப் போடுவது என்பதில் கட்சி மேலிடத்தால் ஒரு முடிவுக்கு வர முடியாத நிலை.
ஏகப்பட்ட போட்டி
தலைவர் பதவிக்கு தற்போது ஏகப்பட்ட பேர் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஞானதேசிகனே தான் பதவியில் நீடிக்க முயற்சித்து வருகிறார். மறுபக்கம் ப.சிதம்பரம் தலைவர் பதவியைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். வசந்தகுமாரும் முட்டி மோதி வருகிறார். இப்படிப் பலரும் பம்பரமாக சுழன்று பதவியைப் பிடிக்க பரிதவித்து வருகின்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் புகார்
இந்த நிலையில் கட்சித் தோல்வி குறித்து ஆராய்ந்து வரும் ஏ.கே.அந்தோணி தலைமையிலான குழுவின் கூட்டத்தில் ஞானதேசிகன் ஆஜராகி தோல்விக்கான காரணம் குறித்து விளக்கியிருந்தார். மேலும் கட்சி மேலிடம் மீதும் அவர் பல புகார்களை வாசித்ததாகவும் தெரிகிறது. இருப்பினும் பொத்தாம் பொதுவாகத்தான் புகார் கூறியிருந்தாராம் ஞானதேசிகன்.
வாட்ஸ் ஆப்பில் போட்டுக் கொடுத்துட்டாங்களே..
இந்த நிலையில், சத்தியமூர்த்தி பவனில் தன்னைச் சந்திக்க வருவோரிடம், என்னங்க இந்த ராகுல் காந்தி, இப்படி சொதப்புகிறாரே என்ற ரேஞ்சில் எதையே பேசி விட்டார் போல ஞானதேசிகன். அதை எதிர்த் தரப்பைச் சேர்ந்த யாரோ ரகசியமாக மொபைல் வீடியோவில் பதிவு செய்து வாட்ஸ் ஆப்பில் ஏற்றி ராகுல் காந்திக்கே அனுப்பி வைத்து விட்டார்களாம்.
எப்படிப் பேசியிருக்கார் பார் தலைவா...
ஞானதேசிகன் பேசிய பேச்சைப் பாருங்கள் என்று குறிப்பிட்டு இ மெயில் மூலம் மேலிடத்திற்குப் பற்ற வைத்து விட்டார்களாம். இதனால் ஜி.கே.வாசன் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
தீயாய் வேலை செய்த அந்தக் குமாரு யாரு...!
இந்த வேலையைச் செய்தது யார் என்ற ஆராய்ச்சியி்ல தற்போது குதித்துள்ளது வாசன் தரப்பு. ஆனால் யார் என்பதுதான் தெரியவில்லையாம். மறுபக்கம் ஞானதேசிகன் பேயடித்தது போல பெரும் அதிருப்தியுடன் காணப்படுகிறாராம்.