"நாசமாகப் போக வேண்டும் என்று வேண்டி விரும்பி வேண்டிக் கொள்கிறோம்".....!!!
திருப்பூர்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களைப் பழி வாங்கும் அதிகாரிகள் நாசமாகப் போக வேண்டும் என்று வேண்டி கோவை மாவட்டம் மாசாணியம்மன் கோவிலில் மிளகாய் அரைத்துப் பூசும் நிகழ்ச்சிக்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் கோவை அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொர்பான துண்டறிக்கை ஊழியர்களிடையே தற்போது பரவி வருகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் இந்த துண்டறிக்கை வழங்கப்பட்டு வருகிறது.
பழிவாங்கும் அதிகாரிகள்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை பழிவாங்கும் போக்குவரத்துக் கழக பணியாளர்கள், மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் நாசமாக போக கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவிலில் 28.08.2014 அன்று பிரதோஷ நாளில் பாதிக்கப்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்களால் மிளகாய் அரைத்து பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.
11 ரூபாய் கொடுத்துப் பூசலாம்
இந்த நிகழ்ச்சிக்கு பாதிக்கப்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் மிளகாய் அரைப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு பயன் பெறவும். நன்கொடை ரூ.11.00 மட்டும். இப்படிக்கு, தொடர்புக்கு:-94891-54555, 98940-60618, 95248-88080.
என்னென்ன மோசடி பாருங்கள்
இந்த துண்டறிக்கை திருப்பூர், ஈரோடு, மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை அதிகாரிகள், மற்றும் அமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் போக்குவரத்து கழக ஊழியர்களையும், பொதுமக்களையும் ஏமாற்றியும், சுரண்டியும் வருகிறார்கள் என்று அரசு போக்குவரத்து கழகத்தின் ஊழியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
கட்டாயப்படுத்தப்படும் டிரைவர்கள்
பேருந்துகளின் என்ஜினை தயாரிக்கும் நிறுவனம் ஒரு லிட்டர் டீசலுக்கு 4.5 கிலோ மீட்டர் தூரம் இயக்க முடியும் என்று கூறியுள்ள பேருந்துகளை 6.0-கி.மி.தூரம் இயக்க வேண்டும் என்று அதிகாரிகள் டிரைவர்களை கட்டாயப்படுத்துகின்றனர்.
கேவலமாக திட்டுகிறார்கள்
ஒவ்வொரு நாளும் வசூல் குறைவாக உள்ளது என்ற காரணத்திற்காக ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அதிகாரிகள் கேவலமாகத் திட்டுகிறார்கள். ஒரு பேருந்து நிலையத்திற்கு வர வேண்டிய நேரத்திற்கு சில நிமிடங்கள் அதிகமாக வந்தாலும் சரி தாமதமாக வந்தாலும் சரி அதிகாரிகளிடம் திட்டு வாங்கவேண்டியுள்ளது.
மாமூல் கொடுக்கும் தனியார் பஸ்கள்
அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மாமூல் கொடுக்கும் தனியார் பேருந்துகளுக்கு முன்பாகவும் பின்னரும் கிளம்பும் அரசுப்பேருந்துகளை "விரைவு பேருந்துகள்" என்ற பலகையை மாட்டி கூடுதல் கட்டணம் விதிப்பதால் பயணிகள் யாரும் அந்த பேருந்துகளில் ஏறுவது இல்லை. இதனால், தனியார் பேருந்துகளுக்கு இரண்டு மடங்கு கூட்டம் செல்கிறது.
மைலேஜுக்காக
ஒரு லிட்டருக்கு 6.0-கி.மி. "மைலேஜ்" வருவதற்காக பேருந்தை மெதுவாகவும், நியூட்ரலிலும் ஓட்டுவதால், குறிப்பிட்ட நேரத்தில் ஒவ்வொரு இடத்துக்கும் போய் சேர முடிவதில்லை. இதனால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து போய்விட்டது. தவிர, அரசு பேருந்துகளில் ஏறும பயணிகள் வண்டியை மெதுவாக ஓட்டும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை கேவலாமாக திட்டிவிட்டு செல்கின்றனர்.
ஓவர் டைம்
எல்லா இடங்களிலும், ஓட்டுனர் மாற்றும் நடத்துனர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. புதிய ஆட்களை நியமனம் செய்வது இல்லை. பழைய ஆட்களையே "ஓவர் டைம்" ஒட்டும்படி வற்புறுத்துகின்றனர். அப்படி ஓடும்போது, வழங்க வேண்டிய தினப்படி ரூ:-534-க்கு பதில் அதில் பாதியாக ரூ:-286-மட்டுமே வழங்குகிறார்கள்.
வில்லை இல்லாமல் வந்தார்
ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வழங்க வேண்டிய பெயர் வில்லை (நேம் பேட்ஜ்) போக்குவரத்து கழகத்தால் வழங்கப்படுவதில்லை. ஆனால், பெயர் வில்லை அணியாமல் வரும் தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களுளிடம் ரூ.250 விதிக்கப்படுகிறது.
பறிபோகும் பலன்கள்
எல்.ஐ.சி மற்றும் தொழிலாளர் நலநிதிக்கு பிடித்தம் செய்யப்படும் பணத்தை உடனடியாக சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்புவது கிடையாது. இதனால், அந்த துறையில் இருந்து தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் கிடைக்காமல் போகிறது.
ஜப்தியான 525 பஸ்கள்
தமிழகத்தில், 525 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றங்களில் பல மாதங்கலாக நின்றுகொண்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு 5 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அதிகாரிகள் மற்றும் அமைச்சரும் நல்ல முறையில் நிர்வாகத்தை நடத்தினால், விபத்து ஏற்ப்பட்ட பயனாளிகளுக்கு உரிய காலத்தில் இழப்பீடு கொடுத்து பேருந்துகள் நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்படுவதை தடுக்கலாம்.
எல்லாவற்றிலும் ஊழல்
பேருந்துகள் கொள்முதல் செய்வது, டயர் மற்றும் உதிரி பாகங்கள் கொள்முதல் செய்வது, வண்டிக்கு டீசல் அடிப்பது என அனைத்திலும் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. இவர்களின் கொள்ளையை எங்களால் தடுக்க முடியவில்லை. அதனால், தான் எங்கள் வாழ்கையை கெடுக்கும் அதிகாரிகள் நாசமாக போகவேண்டும் என்று பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் வரும்-28,ம் தேதி மிளகாய் அரைத்து சாமியின் தலையில் தேய்த்து சாமிகும்பிட உள்ளோம் என்கிறார்கள் தொழிலாளர்கள்.