36 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு ஆதரவு ஏன்.. தவ்ஹீத் ஜமாத் அளிக்கும் விளக்கம்
சென்னை: தமிழகத்தில் 36 தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது ஏன் என்பதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
திமுகவுக்கு 36 தொகுதிகளில் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணிக்கும், காங்கிரஸுக்கும் வாக்களிக்க முடிவு செய்துள்ளது தவ்ஹீத் ஜமாத்.
இந்த நிலையில் திமுகவுக்கு ஆதரவு ஏன் என்பது குறித்து ஜமாத் விளக்கம் அளித்துள்ளது. அதன் விளக்கம்...
ஊடகங்களை விலைக்கு வாங்கும் மோடி
இத்தேர்தலில் நரேந்திர மோடியைப் பிரதமராக்க கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு ஊடகங்களை விலைக்கு வாங்கி தனக்கு ஆதரவான நிலையை உருவாக்க முயற்சிக்கிறது. மறுபுறம் காங்கிரசும் மாநிலக் கட்சிகளும் களத்தில் நிற்கின்றன.
காங்கிரஸ் நன்மை செய்யப் போவதில்லை
காங்கிரசோ மாநிலக் கட்சிகளின் கூட்டனியோ ஆட்சியமைத்தால் நமக்கு எந்த நன்மையும் செய்யப் போவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் பாஜக ஆட்சியமைத்தால் முஸ்லிம்களின் மதஉரிமைக்கும், பள்ளிவாசல்களுக்கும், முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும், முஸ்லிம் பெண்களின் மானத்துக்கும் மாபெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை மட்டும் காரணமாகக் கொண்டுதான் முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்.
பாஜகவின் நச்சு தேர்தல் அறிக்கை
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்கள் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வதையும், முஸ்லிம்கள் மரணிக்கும் போது இஸ்லாமிய சட்டத்தின் படி சொத்துக்களைப் பிரித்துக் கொள்வதையும் இந்திய அரசியல் சட்டம் அனுமதித்து உள்ளது.
முஸ்லீ்ம்கள் ஏற்க முடியாது
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்று சொல்லியுள்ளது. அனைத்து மதத்தவர்களும் இந்து முறைப்படி திருமணம் சொத்து பிரிவினை உள்ளிட்ட விஷயங்களைச் செய்ய சட்டம் கொண்டு வருவோம் என்பது இதன் பொருள். இதை முஸ்லிம்கள் ஏற்கமுடியுமா என்று சிந்தியுங்கள்.
பாபர் மசூதி இடித்துத் தகர்ப்பு
450 ஆண்டுகாலம் அல்லாஹ்வின் வணக்கம் நடைபெற்ற பாபர் பள்ளிவாசலை சட்ட விரோதமாக மோடி கும்பல் இடித்து தகர்த்தனர். இப்போது ஆட்சியில் அமர்த்தினால் பள்ளிவாசல் இட்த்தில் கோவிலைக் கட்டுவோம் என்பதைச் சொல்லி ஓட்டு கேட்கிறது.
தமிழகத்தில் ஒரு இடத்திலும் பாஜக வெல்லாது
தமிழகத்தில் பாஜக ஒரு இடத்திலும் வெல்ல முடியாது என்பதிலும். பாஜகவுக்கு எந்த முஸ்லிமும் ஓட்டு போட மாட்டார் என்பதிலும் சந்தேகம் இல்லை.
திமுக அல்லது அதிமுக
ஆனால் மாநிலத்தின் இரண்டு பெரிய கட்சிகளான திமுக அல்லது அதிமுக தான் வெற்றி பெற முடியும் என்பதால் இரண்டில் ஒன்றைத்தான் முஸ்லிம்கள் தேர்வு செய்யும் நிலையில் இருக்கிறோம்.
யாருக்கு வாய்ப்பு
தேர்தலுக்குப் பின்னர் பாஜக ஆட்சி அமைக்க இவ்விரு கட்சிகளில் யார் துணை நிற்க வாய்ப்பு உள்ளது என்பதன் அடிப்படையில் தான் நாம் முடிவு செய்தாக வேண்டும்.
திமுக தெளிவாக இருக்கிறது
திமுகவைப் பொருத்தவரை பாஜகவை ஆட்சியில் அமர விட மாட்டோம் என்று தெளிவாகச் சொல்லி வருகிறது. முஸ்லிம்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் எதிராக பாஜக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை வெளிப்படையாக திமுக கண்டித்தும் விமர்சனம் செய்தும் வருகிறது. ஆனால் அதிமுகவின் நிலை என்ன?
அதிமுகவுக்கு முதலில் ஆதரவு ஏன்
இடஒதுக்கீட்டை அதிகரித்துத்தர ஆணையம் அமைத்த அதிமுகவிற்கு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவளிப்பது என்று முதலில் தவ்ஹீத் ஜமாஅத் முடிவை அறிவித்திருந்தது.
மோடியை எதிர்க்கவில்லையே ஜெயலலிதா
ஆரம்பத்தில் தானே பிரதமர் என்று பிரச்சாரத்தைத் துவக்கிய ஜெயலலிதா அதிமுக என்ற இந்த எக்ஸ்பிரஸ் டெல்லிக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் என்றும் அதற்கு ஓட்டுனராக நான் இருப்பேன் என்றும் பேசினார். அவர்தான் பிரதமர் என்ற கோணத்தில்தான் அதிமுகவினரும் பிரச்சாரம் செய்தனர். பாராளுமன்ற வடிவில் மேடை, அதில் ஜெயலலிதா கொடி ஏற்றுவது போல காட்சிகள் என்ற நிலையைக் கண்ட நாம் தன்னைப் பிரதமராக அறிவித்துள்ளவர் பாஜகவின் மோடியைப் பிரதமராக்க ஆதரவு தெரிவிக்க மாட்டார் என்று கருத்தை விதைத்தார்.
மாறிப் போன ஜெயலலிதா
பிரச்சாரத்தைத் துவக்கிய ஜெயலலிதாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அதிமுக அங்கம் வகிக்கும் ஒரு அரசாங்கம் அமைய வேண்டும் என்று திடீரென்று சுருதி குறைத்து பேச ஆரம்பித்தார். தன்னைப் பிரதமராக அறிவித்தவர் தான் அங்கம் வகிக்கும் வகையிலான மத்திய அரசு என்று பேச ஆரம்பித்தது முஸ்லிம் சமுதாயத்துக்கு மட்டுமின்றி முஸ்லிமல்லாத மக்களுக்கும் சந்தேகத்தை எழுப்பியது.
வாய் திறப்பதில்லையே
மேலும் போகின்ற ஊர்களில் எல்லாம் காங்கிரஸையும், திமுகவையும் கடுமையாகத் தாக்கி பிரச்சாரம் செய்த அவர் பாஜக குறித்து லட்சத்தில் ஒரு பங்கு கூட வாய் திறக்கவில்லை.
ஜெயலலிதா மீது சந்தேகம்
பாஜகவையும் மோடியையும் விமர்சித்து ஜெயலலிதா பேசாமல் வாய் மூடி இருப்பதால் தேர்தலுக்குப் பிறகு இவர் பிஜேபியை ஆதரிப்பார் என்ற சந்தேகத்தை நீக்கும் வகையில் அவர் வெளிப்படையாக தனது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் பலவகைகளில் முயற்சி செய்தது. அவர் இது குறித்து வாய்திறக்கும் வரை எங்களால் அதிமுகவை ஆதரித்து பொதுக் கூட்டங்களில் பேச இயலாது என்றும், கொடுத்த தேதிகளை ரத்து செய்தும், இதனால் ஏற்படும் விளைவுகளையும் அதிமுகவின் நால்வர் குழு உள்ளிட்ட முக்கிய தலைவர்களிடம் தவ்ஹீத் ஜமாஅத் எடுத்துக் கூறியது.
யார் கேட்டும் பதில் சொல்லவில்லையே ஜெ.
இதன் பிறகும் அவர் பாஜக பற்றி வாய்திறக்கவில்லை. ஏன் இதுவரை பாஜக குறித்து வாய்திறக்க மறுக்கின்றார் என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார். மார்க்சிஸ்ட் கட்சியின் ராம கிருஷணன் கேள்வி எழுப்பினார். தா. பாண்டியன் கேள்வி எழுப்பினார். கருணாநிதி, ஸ்டாலின் என அனைத்து எதிர்க்கட்சியினரும் கேள்வி எழுப்பினார்கள். அப்போதும் ஜெயலலிதா பாஜக பற்றி வாய்திறக்கவில்லை.
நாசகார சிந்தனை கொண்ட தேர்தல் அறிக்கை
முஸ்லிம்களை அழித்தொழிக்கும் விதமாக வெளியிடப்பட்ட பாஜகவின் நாசகார சிந்தனை கொண்ட தேர்தல் அறிக்கை வெளியானது. பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியானவுடன் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் பாஜகவைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினர்.
முஸ்லீம்களுக்கு எதிரான போர் முரசு பாஜக தேர்தல் அறிக்கை
முஸ்லிம்களுக்கு எதிராக போர் தொடுக்கும் வகையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியான பின்பும் ஜெயலலிதா பாஜக பற்றி வாய் திறக்கவில்லை.
திமுகவுக்கு ஆதரவு
பாஜகவுடன் ஒப்பந்தம் செய்திருந்தால் மட்டுமே இப்படி அசாத்திய மவுனம் சாதிக்க முடியும் என்பது உறுதியானதால் தவ்ஹீத் ஜமாஅத் தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. திமுகவை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளது.
அதிமுகவுக்கு ஓட்டுப் போடுவது பாஜகவுக்கு விழும் ஓட்டு
அதிமுகவுக்குப் போடும் ஓட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டுதான் என்பது தெள்ளத்தெளிவாகி விட்டதால் அதிமுகவுக்கு வாக்களிப்பது தங்கள் கைகளால் தங்கள் கண்களைக் குத்திக் கொள்வதாகும். தமது அழிவை தமது கைகளால் தேடிக் கொள்வதாகும்.
முறியடிப்போம்
அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்ற கருத்துக் கணிப்புகளை முஸ்லிம் வாக்குகள் முறியடிக்கும் வகையில் அதிமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற முடியாத அளவுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இதுவரை வாக்களிப்பதில் அலட்சியமாக இருந்த முஸ்லிம்கள் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கான சமுதாயக் கடமை தமக்கு உள்ளது என்பதை உண்ர்ந்து வாக்களிக்க வேண்டும்
ஆபத்தைக் கருதி வாக்களிப்போம்
நாம் வாக்களிப்பது மட்டுமின்றி சொந்த வேலையாகக் கருதி வரவிருக்கும் ஆபத்தை சமுதாயத்துக்கு புரியவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம் சமுதாயத்துக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கிறது.
மாறன் ஆதரவு கோரினார்
திமுகவுக்கு தவ்ஹீத் ஜமாத் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்திற்கு வந்து ஆதரவு கோரினார்.