இன்று முழு சந்திர கிரகணம்- அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் முழுமையாக தெரியும்
சென்னை: இந்தாண்டின் 2வது சந்திர கிரகணம் இன்று பகல் 1.43க்கு தொடங்கி இரவு 7.04 மணி வரை நடக்க உள்ளது. இன்று நிகழ உள்ள சந்திர கிரகணம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் முழுமையாகத் தெரியும்.
இந்தியாவில் இதனை கடற்கரை நகரங்களில் உள்ள மக்கள் காண முடியும் என்று கோளரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைத்துவிடும். இந்த நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.
இந்திய நேரப்படி பிற்பகல் 2.44 மணிக்குத் தொடங்கி மாலை 6.05 மணி வரை சந்திர கிரகணம் நிகழும். சென்னையைப் பொருத்தவரை இன்று மாலை 5.54 மணிக்கு கிரகணத்தைப் பார்க்கலாம்.
சென்னை கடற்ரையில் இருந்து இந்த கிரகணத்தைப் பார்வையிடலாம். 11 நிமிடங்கள் கிரகணம் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது முழு சந்திரகிரகணம்
இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் ஏப்ரல் 15ம் தேதி நிகழ்ந்தது. இதையடுத்து, 2வது சந்திர கிரகணம் இன்று நடக்கிறது.
புறநிழல் சந்திரகிரகணம்
இது குறித்து தாம்பரம் வானவியல் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய நேரப்படி, இன்று பிற்பகல், 1:44 மணிக்கு, புறநிழல் சந்திர கிரகணம் துவங்கி, பகல் 2:44 மணி அளவில், நிஜநிழல் சந்திர கிரகணமாக பிரவேசிக்கிறது. மாலை 4:25க்கு, சந்திர கிரகணம் உச்சகட்டத்தை அடைகிறது.
சென்னையில் 10 நிமிடம்
சென்னையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின், 10 நிமிடங்கள் மட்டுமே, மாலை 6:04 வரை, நிஜநிழல் கிரகணம் தெரியும். பின் புறநிழல் கிரகணம், இரவு 7:55 வரை தெரியும்.
கிழக்கு திசையில்
சென்னையில் சந்திர உதயம் மாலை 5:54 மணி. சூரிய மறைவின் போது, அடிவானில் மேகமூட்டம், வளிமண்டல ஒளிச்சிதைவு, ஈரப்பதம் காரணமாக நிஜ கிரகணத்தினை காண்பது சிரமம். ஆயினும் புறநிழல் கிரகணத்தை காணலாம். (சந்திரனின் ஒளி சற்று மங்கலாக இருக்கும்). அதை வெறும் கண்களால் கிழக்கு திசையில் காணலாம்.
சென்னை கடற்கரையில்
இதை சென்னை கடற்கரையில் பார்க்க வாய்ப்புண்டு என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவில்களில் நடை அடைப்பு
சந்திரகிரகணம் தொடங்க உள்ளதையொட்டி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் திருப்பதி, பழனி, மதுரை மீனாட்சி அம்மன் உள்ளிட்ட பிரபல கோவில்களில் நடை அடைக்கப்பட உள்ளது.
திருப்பதியில் தரிசனம் ரத்து
திருப்பதி கோவிலில் இரவு 8 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கோயில் முழுவதும் சுத்தம் செய்த பிறகு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். தொடர்ந்து இரவு 10.30 முதல் வழக்கம் போல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
அனைத்து கோவில்களிலும்
இதே போன்று திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் உட்பட தேவஸ்தானம் சார்பில் உள்ள அனைத்து கோயில்கள், இந்து அறநிலையத்துறை சார்பில் உள்ள அனைத்து கோயில்களும் இன்று சந்திர கிரகணத்தையொட்டி மூடப்பட உள்ளது.
அன்னதானம் நிறுத்தம்
மேலும் சந்திர கிரகணம் என்பதால் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திருமலையில் உள்ள அன்னபிரசாத கூடம், திருச்சானூரில் உள்ள அன்னபிரசாத கூடத்திலும் அன்னதானம் வழங்குவதும் நிறுத்தப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.