டிரான்ஸ்பார்மரில் அரசுப் பேருந்து மோதி விபத்து - 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
நெல்லை: நெல்லையில் சாலையோரமாக இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பயணிகள் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த 40 பேரும் பத்திரமாக உயிர் தப்பினர்.
நெல்லை பேருந்து நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சேரன்மகாதேவிக்கு தடம் எண் 36 என்ற எண்ணுள்ள டவுண் பஸ் புறப்பட்டது. இந்தப் பேருந்து நெல்லை மேம்பாலத்தைக் கடந்து எஸ்.என்.ஹை ரோட்டில் சென்று கொண்டிருந்தது.
பேருந்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 40 பேர் இருந்துள்ளனர். அப்போது ஓட்டுனரின் கவனக் குறைவால் பேருந்து நிலைதடுமாறி சாலையின் ஓரத்திலிருந்த உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதியது.
இதனை சற்றும் எதிர்பாராத பயணிகள் அலறினர். இதில் பேருந்தின் முன் பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயமும், உள்ளிருந்தவர்கள் சிறுகாயமும் அடைந்தனர்.
காயம்பட்டவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மின் கம்பத்தில் பேருந்து மோதிய சமயம் வயர்கள் அறுந்து விழவில்லை. இதனால் பேருந்திலிருந்த 40 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்துக்குப் பின்னர் ஓட்டுனரும்,நடத்துனரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து போலீசார் தீவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.