ஊழல் குற்றவாளி ஜெ. தலைமை வகிக்கும் கட்சியினர் அமைச்சரானது செல்லாது.. 'டிராபிக்' வழக்கு
சென்னை: ஊழல் குற்ற வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா தலைமை தாங்கும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றது சட்டவிரோதமானது, இதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குப் போட்டுள்ளார்.
இந்த வழக்கில் இன்று மாலை தீர்ப்பு தருவதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக டிராபிக் ராமசாமி ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த பொது நலன் மனுவில்,
தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதாவுக்கு, ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஜெயலலிதா பொதுச் செயலாளராக உள்ள அ.தி.மு.கவை சேர்ந்தவர்களை முதல்வராகவும், பிற துறைகளின் அமைச்சர்களாகவும் பதவி ஏற்க அனுமதிக்க கூடாது.
அந்த கட்சியை சேர்ந்தவருக்கு அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என்று கடந்த 29-ந்தேதி தமிழக ஆளுநரின் செயலாளர், தலைமை செயலாளர், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தும் பரிசீலிக்கவில்லை. எனவே, என் மனுவை பரிசீலிக்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று காலை விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர் மாலையில் தீர்ப்பைத் தெரிவிப்பதாக நீதிபதிகள் அறிவித்து தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.