தமிழக அரசு கேபிள் "டிவி'க்கு "டிராய்' அமைப்பு எச்சரிக்கை
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னையில், 2012, நவம்பர், 1 முதல், "டிவி' ஒளிபரப்பு டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. சென்னையில், தமிழக அரசி"ன் கேபிள் "டிவி' நிறுவனமும், பல சேனல்களை ஒளிபரப்பும் மையமான, எம்.எஸ்.ஓ., வேலையைத் துவங்கியது.
இதற்காக, சென்னையில், கட்டுப்பாட்டு அறையை, முதல்வர் துவக்கினார். ஆனால், டிஜிட்டல் ஒளிபரப்பு செய்ய, தமிழக அரசுக்கு மத்திய ஒலிபரப்புத் துறை, அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. இதனால், அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் ஒளிபரப்பு, டிஜிட்டல் முறையில் இல்லாமல், "அனலாக்' என்ற சாதாரண முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கிடையே, தனியார் எம்.எஸ்.ஓ.,கள் சிலர், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்று, சேனல்கள் ஒளிபரப்பை செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை பெருநகரில், டிஜிட்டல் ஒளிபரப்பு திட்டம் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்ய, நேரடி ஒளிபரப்பாளர்கள், எம்.எஸ்.ஓ.,க்கள் மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டத்தை, "டிராய்' அமைப்பு டில்லியில் கூட்டியது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அதன் செயலர், ராஜிவ் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"கேபிள் "டிவி' ஒளிபரப்பை, டிஜிட்டல் முறையில் ஒளிபரப்ப வேண்டும். 2012, நவம்பர் 1க்குள், டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னையில் டிஜிட்டல் ஒளிபரப்பை அமல் செய்ய வேண்டும்' என, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. தரமான ஒளிபரப்புக்கு உறுதி, நுகர்வோர் குறைதீர் மையம், கட்டண முறை ஆகியவற்றுக்கு இச்சட்டம் வழி வகை செய்கிறது.
டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் டிஜிட்டல் முறை அமலாக்கம் செவ்வனே நடந்துள்ளது. ஆனால், சென்னையில் இச்சட்டத்தை பின்பற்றாமல், டிஜிட்டல் முறை இல்லாத, ஒளிபரப்பு நடந்து வருகிறது. டிஜிட்டல் முறை இல்லாத ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டும். டிஜிட்டல் முறையில், "டிவி' ஒளிபரப்பை, சென்னை நகரில் செய்யவில்லை எனில், "டிராய்' சட்டப்படி, அபராதம் விதிப்பது மற்றும் பிற எதிர்விளைவுகளை, எம்.எஸ்.ஓ.,க்கள் சந்திக்க நேரிடும்.
டிஜிட்டல் முறையில் தான், கேபிள் இணைப்பு பெறப்பட்டுள்ளது என்பதை, வாடிக்கையாளர்கள் தெரிவிக்க வேண்டும். இல்லையேல், எம்.எஸ்.ஓ.,க்களின் இணைப்பும் துணடிக்கப்படும். சட்ட விதிகளை மீறியதாக, எம்.எஸ்.ஓ.,க்கள் மீது, சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு, ராஜிவ் அகர்வால் கூறியுள்ளார்.
முடங்கும் அரசு கேபிள் டிவி
"டிராய்' அமைப்பின் இந்த அறிவிப்பால், டிஜிட்டல் உரிமம் பெறாமல், தமிழக அரசு கேபிள் "டிவி' நிறுவனம் இயங்குவது முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு கேபிள் 'டிவி' வட்டாரங்கள் கூறுகையில், "டிஜிட்டல் உரிமம் வேண்டி, மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளோம். டிஜிட்டல் உரிமம் வந்ததும், "செட்டாப்' பாக்ஸ்களை வழங்க, தயாராகவும் உள்ளோம்.
"டிஜிட்டல் உரிமம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலைவையில் உள்ளது. எனவே, அரசு கேபிள் "டிவி' நிறுவனம் இயங்குவதில் சிக்கல் இல்லை' என்கின்றனர்.