பள்ளி சான்றிதழில் பெயர் மாற்ற போராடும் திருநங்கை: அரசுத் தேர்வில் வெற்றி பெற்றும் பலனில்லை
மதுரை: தமிழக அரசின் குரூப் 4 தேர்வெழுதி வெற்றி பெற்றும் வேலையில் சேர முடியாமல் நீதிமன்றத்துக்கும், வீட்டுக்குமாய் அலைந்து கொண்டிருக்கிறார் திருநங்கையான ஸ்வப்னா.
மதுரை, ஆண்டாள்புரத்தை சேர்ந்தவரான இவர், கடந்த 2011ஆம் ஆண்டு திருநங்கையாக மாறி தன் பெயரை ஸ்வப்னா என்று வைத்துக்கொண்டார். அதை முறைப்படி அரசிதழிலும் வெளியிட்டார். படிப்பில் கெட்டிக்காரரான இவர் மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் டிகிரி முடித்து, அதன் பின் டைப்ரைட்டிங் மற்றும் கம்ப்யூட்டர் கல்வியில் சான்றிதழ்களும் வாங்கியுள்ளார்.
கடந்தாண்டு நடந்த குரூப் 4 தேர்வு எழுதி, அதிலும் வெற்றி பெற்றுள்ளார். இதனை திருநங்கைகள் மட்டுமில்லாமல் அனைத்து மக்களும் பாராட்டினார்கள். ஆனால் அந்த பணியில் சேரும் நேரத்தில்தான் இவருக்கு ஆண், பெண் என இரண்டு பெயர்கள் இருப்பதை காரணம் காட்டி வேலை வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள்.
இதுகுறித்து, ஸ்வப்னா கூறுகையில், ''சிறு வயதிலேயே எனக்குள் பெண் தன்மை குடியேறி விட்டது. பள்ளியில் படிக்கும் வரை உள்ளுக்குள் பெண்ணாக இருந்தாலும் வெளியில் ஆணாக நடமாடினேன்.
2011ல் தான் முழுமையான பெண்ணாக மாறினேன். அதன் பிறகு அரசு கெஜட்டிலும் எனது பெயரை ஸ்வப்னா என்று மாற்றிக் கொண்டேன்.
எனக்கு படிப்பில் நல்ல ஆர்வம். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வு எழுதினேன். அதிலும் வெற்றி பெற்று விட்டேன். வெற்றி பெற்றவுடன் சான்றிதழ் சர்பார்ப்புக்கு வரச்சொன்னார்கள்.
அபோதுதான் பள்ளியில் வழங்கப்பட்ட டி.சி.யில் ஆண் பெயரும், பல்கலைக்ழகம் வழங்கிய சான்றிதழில் பெண் பெயரும் இருப்பதை சுட்டிக்காட்டினார்கள். நான் 2011ல் கெஜட்டில் பெயர் மாற்றியதையும், பல்கலையில் படித்தபோதும், டைப் ரைட்டிங் படித்தபோதும் ஸ்வப்னா என்ற பெயரிலேயே சான்றிதழ் வாங்கியதையும் ஆதாரங்களாக காட்டினேன்.
அது மட்டுமில்லாது எங்கள் பகுதி தாசில்தார் கொடுத்த சான்று, திருநங்கைகளுக்கான அடையாள அட்டை என எல்லாவற்றிலும் ஸ்வப்னா என்றிருக்கும் நான்தான், பள்ளி சான்றிதழ்களில் ஆண் பெயரில் இருகிறேன் என்று எடுத்து சொல்லியும் பல ஆதரங்களை காட்டியும் எதையும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இப்படியே நாட்கள் கடந்து போனது.
இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் நடந்த வி.ஏ.ஓ. தேர்வையும் எழுதினேன். இதிலும் ஏதாவது சிக்கல் வந்து விடக்கூடாது என்பதால், கெஜட்டில் பெயர் மாற்றிய ஆதாரத்துடன் இணைத்து பள்ளி சான்றிதழில் என் பெயரை ஸ்வப்னா என்று மாற்றம் செய்து தாருங்கள் என, அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு மனு அனுப்பினேன். ஆனால், அவர்களோ, பெயர் மாற்றம் செய்து புதிதாக சான்றிதழ் வழங்க விதிகளில் இடமில்லை என்று பதில் அனுப்பினார்கள்.
அதோடுதான் உயர்நீதிமன்றத்தில் எனக்கு நியாயம் கேட்டு வழக்கு தாக்கல் செய்தேன். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, எனது பெயரை மாற்றி கொடுக்கும்படியும், புதிதாக கல்வித்துறை இயக்குனருக்கு வின்னப்பிக்கும்படியும், அதை அதிகாரிகள் பரிசிலிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்கள். நானும் விண்ணப்பித்துள்ளேன்.
இதுவரை பதில் வரவில்லை. திருநங்கைகளை அங்கீகரிக்க வேண்டுமென்று அரசு சொல்கிறது. ஆனால், உண்மையில் அது கேலிக்கூத்தாகத்தான் உள்ளது. இப்படியே போனால் எனக்கு மட்டுமல்ல என் போன்ற படித்த எந்த திருநங்கைக்கும் எந்த அரசு வேலையும் கிடைக்காது.'' என்றார்.
கல்வித்துறை வட்டாரங்களில் விசாரித்தால், ஒரு ஆண் பெயரையோ, பெண் பெயரையோ கரெக்சன் செய்து கொடுத்து விடலாம். ஆனால், ஒரு ஆணை, பெண்ணாக மாற்றி கொடுப்பது சம்பந்தமாக பள்ளி விதிகளில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அதனால்தான் இந்த திருநங்கை விஷயத்தில் ஒரு முடிவெடுக்க முடியவில்லை என்று தகவல் சொல்கிறார்கள்.
அரசுதான் ஒரு ஜி.ஓ. போட்டு திருநங்கைகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்கிறார் ஸ்வப்னா. அரசு நடவடிக்கை எடுக்குமா?