திருச்சி: பதற்றமான 214 வாக்கு சாவடிகளில் வெப் காமிரா கண்காணிப்பு
திருச்சி: திருச்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்படும் 214 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக வெப் கேமரா வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டரும், திருச்சி லோக்சபா தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஜெயஸ்ரீ முரளிதரன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாளை (இன்று )நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள 2,319 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி குடிநீர், கழிவறை, மாற்று திறனாளிகளுக்காக சாய்வுதளம் ஆகிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணியில் திருச்சி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 410 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
திருச்சி மாவட்டத்தில் 214 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த வாக்குச் சாவடிகளில் ‘வெப் கேமரா‘ பொருத்தி இணையதளம் மூலம் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும். இணையதள வசதி இல்லாத வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நடவடிக்கைகள் வீடியோவில் பதிவு செய்யப்படும். பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிப்பதற்காக 240 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் திருச்சி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 244 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களில் வெளி இடங்களில் இருந்து வந்துள்ள துணை ராணுவத்தினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஆகியோரும் அடங்குவார்கள். பதற்றமான வாக்குச் சாவடிகளில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அவற்றை சரி செய்ய பெல் நிறுவனத்தின் பொறியாளர் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் தயார் நிலையில் இருப்பார். தேவைப்பட்டால் பழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள் உடனடியாக மாற்றம் செய்யப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.