"திமுகவுக்கு துரோகம் செய்யாதவர்களே வேட்பாளர்கள்": மதுரையில் மு.க. அழகிரிக்கு ஸ்டாலின் பதிலடி!!
மதுரை: லோக்சபா தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பற்றி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் மதுரையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், திமுகவுக்கு துரோகம் செய்யாதவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக மு.க. அழகிரி, திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து திமுகவுக்கு எதிராக தீவிரமாக அழகிரி செயல்பட்டு வருகிறார். லோக்சபா தேர்தலில் திமுகவை 3வது அல்லது 4வது இடத்துக்கு தள்ள வேண்டும் என்று தமது ஆதரவாளர்களுக்கு அழகிரி கட்டளை பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் அழகிரியின் கோட்டை என்று சொல்லப்படுகிற மதுரை பகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். என்னதான் அழகிரி ஆதரவாளர்கள் அதிகம் உண்டு என்று சொல்லப்பட்டாலும் மதுரையில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட அத்தனை பிரசார கூட்டத்திலும் கூட்டம் அலை மோதியது.
நேற்றைய பிரசாரத்தின் முடிவில் மதுரை ஆனையூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்த அக்கூட்டத்தினரை பார்த்து மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். அவர் பேசும் போது, அட, அட, அட, இந்த கூட்டத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.. உங்கள் எழுச்சியை, உற்சாகத்தை அப்படியே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு..
அத்துடன் மதுரை தொகுதி வேட்பாளர் வேலுச்சாமி மற்றும் அழகிரியின் பரமவைரியான தேனி வேட்பாளர் பொன்.முத்து ஆகியோரை அறிமுகப்படுத்திப் பேசிய மு.க.ஸ்டாலின், "மதுரை தொகுதியில் திமுகவின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளராக போட்டியிடும் வேலுசாமியை பற்றி சொல்வதெனில், அவர் ஒரு சிறந்த வழக்கறிஞர். அனைவருடனும் அன்போடு, பண்போடு, பாசத்தோடு பழகக் கூடியவர். எளிமையானவர். கொஞ்சம் கருப்பானவர் என்றாலும் களையாக இருப்பவர். " கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு ", என்ற பாடலுக்கு ஏற்ப பல சிறப்புகளை பெற்றவர்.
துரோகம் செய்யாதவர்கள்
இன்னும் பெருமையுடன் சொல்வதெனில் இந்த இயக்கத்துக்கு என்றும் துரோகம் செய்யாதவர். தலைவர் கலைஞர் சொல்வதை அப்படியே ஏற்று நடக்கும் மனப்பக்குவம் கொண்டவர். அதே போல பொன்.முத்துராமலிங்கம், ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் செயலாளராக இருந்து, கலைஞரின் நம்பிக்கையை பெற்றவர். நான் இதையெல்லாம் எதற்காக இங்கே குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கும் எனக் கருதுகிறேன். ஆக அப்படிப்பட்டவர்களைத் தான் தலைவர் கலைஞர் அவர்கள் வேட்பாளர்களாக தேர்வு செய்து உங்களிடம் ஒப்படைத்துள்ளார்" என்று சுட்டிக் காட்டிப் பேசினார்.
துரோகம்- அமைதிகாத்த உ.பிக்கள்
ஸ்டாலின் தமது பேச்சின் போது "துரோகம்" "உங்களுக்கு நன்றாக தெரியும்" என்றெல்லாம் சொன்ன போதும் கூட ஆர்ப்பரிக்காமல் அழகிரியைத்தான் குறிப்பிடுகிறார் என்று உணர்ந்து கொண்டு நமக்கேன் வம்பு என்ற பாணியில் சற்றே அமைதியை கடைபிடிக்கவும் செய்தனர் திமுக உடன்பிறப்புகள்.
பின்னர் வழக்கம் போல ஜெயலலிதா அரசு மீது அடுக்கடுக்கான புகார்பட்டியலை வாசித்தார் மு.க.ஸ்டாலின்.