புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா தொடங்கியது
தூத்துக்குடி: தூத்துக்குடியிலுள்ள புகழ் பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகியது. தூத்துக்குடி தூய பனி மய மாதா ஆலயத்தின் 432ம் ஆண்டு திருவிழாவில் இன்று காலை 6.30 மணிக்கு 3ம் திருப்பலியும், 7.30 மணிக்கு கூட்டுத்திருப்பலியும் அதனைத்தொடர்ந்து கொடியேற்றமும் நடந்தது.
கொடியேற்றம்
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன்அம்புரோஸ் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். பல்வேறு ஆலயங்களை சேர்ந்த பங்குதந்தையர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பங்குமக்களும் பங்கேற்றனர். மதியம் 12 மணிக்கு மரிய ஜாண் கோஸ்தா அன்னைக்கு பொன்மகுடம் அணிவித்தார். மாலை 5.30 மணிக்கு இளையோருக்கான திருப்பலி நடக்கிறது.
தினமும் திருப்பலி
திருவிழாவை தொடர்ந்து நாள்தோறும் பங்கு இறைமக்களுக்கான திருப்பலி, இரவு ஜெப மாலை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. தொடர்ந்து விழாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கான சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது. இதில், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கப்பல் மாலுமிகள், வணிகர்கள், மறைமாவட்ட மக்கள், மீனவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிடோருக்கான சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது.
5ம்தேதி முக்கிய நிகழ்வு
ஆகஸ்ட் 4ம் தேதி இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் தலைமையில் பெரு விழா மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்திற்குள் அன்னையின் திருவுருப்பவனி நடக்கிறது. ஆகஸ்ட் 5ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் தலைமை யில் பெருவிழா கூட்டுத் திருப்பலி, மதியம் 12 மணிக்கு மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் பர்ணான்டோ தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி, மாலை 5.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மைகுரு செல்வராசு அடிகளார் தலைமையில் ஆடம்பர திருப்பலி நடக்கிறது.
உள்ளூர் விடுமுறை
தொடர்ந்து இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவப்பவனி, இரவு 10 மணிக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல், நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஆகஸ்ட் 6ம் தேதி காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலி, 6.30 மணிக்கு 2ம் திருப்பலி, அதனைத்தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது. மாதாவின் திருவுருவ பவனி ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறுவதால் அன்று உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் ரவிகுமார் உத்தரவிட்டுள்ளார். சிங்கம் திரைப்படத்தில் இக்கோயில் முன்பாக சூர்யா ஓடிவருவது போல காட்சி அமைக்கப்பட்டிருப்பது சினிமா ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.