சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்!!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை நூற்றுக்கணக்கான தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீனவர்கள் பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி வருகிறார். இதை கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளியானது.
இந்த கட்டுரைக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே கண்டனம் தெரிவித்தன. நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அக்கடிதத்தில் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்; இலங்கை தூதரை நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதனால் இலங்கை அரசு அந்த கட்டுரையை நீக்கி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.
இலங்கையின் இந்த இழிசெயலைக் கண்டித்து தமிழகத்தில் நேற்று பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இலங்கை தூதரகத்தை இழுத்து மூடும் வகையில் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.
இந்தப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் தலைமை வகித்தார். அவர் தலைமையில் நூற்றுக்கணக்கான தமிழ வாழ்வுரிமைக் கட்சியினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.