For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுங்க சாவடிகளை அகற்ற வலியுறுத்தி ஆக.30-ல் தமிழகம் முழுவதும் முற்றுகைப் போராட்டம்: தி.வேல்முருகன்

By Mathi
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: சுங்க சாவடிகளை முழுமையாக இழுத்து மூட வலியுறுத்தி ஆகஸ்ட் 30-ந் தேதி தமிழகம் முழுவதும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களிடம் தி.வேல்முருகன் கூறியதாவது:

Velmurugan

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது என்பதே பகல் கொள்ளை என அனைவரும் குரல் எழுப்பி வரும் நிலையில் வரும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று செய்திகள் வந்துள்ளன.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 41 இடங்களில் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இவை அனைத்திலும் கடந்த ஏப்ரல் மாதம்தான் சுங்கக் கட்டணம் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டது. அதற்குள் மீண்டும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 4,974 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளைப் பராமரிக்க வேண்டியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான். அதற்குத்தான் அந்த ஆணையமே இருக்கிறது. ஒரு நாட்டின் சாலையை பராமரிப்பது என்பது அரசின் அடிப்படை கடமைகளில் ஒன்று.

ஆனால் அந்த அடிப்படை கடமையைக் கூட பொதுமக்களுக்கு அரசு செய்து கொடுக்காமல் யாரோ சில தனியாரிடம் 'சாலை பராமரிப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். அவர்கள் சாலையை பராமரிக்கிறோம் என்ற பெயரில் 'சுங்க கட்டணம்' ஒன்றை வசூலிக்கின்றனர்.

சாலையே இல்லையே..

சாலை பராமரிப்பது என்றால் என்ன? சாலைகளில் எச்சரிக்கை குறியீடுகள், மின்விளக்கு வசதி, கழிப்பறை, ஆம்புலன்ஸ், அவசர தொலைபேசி, அவசர சிகிச்சை என முழுமையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருப்பதுதான் சாலை பராமரிப்பு.

ஆனால் சாலையையே பராமரிப்பதும் இல்லை என்கிற போது இன்னபிற அடிப்படை வசதிகள் எங்கே செய்யப் போகிறார்கள்.. அதே நேரத்தில் வழிப்பறி கொள்ளையர்களாக ஆங்காங்கே சுங்க கட்டணத்தை வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள்..

ஆண்டுக்கு ஒருமுறை என்ற நிலையை மாற்றி மாதத்துக்கு ஒரு முறை சுங்கக் கட்டணத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அடிப்படை வசதிகளே இல்லை..

சுங்கக் கட்டண கொள்ளையே கூடாது என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு. வெளிநாடுகளில் உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துவிட்டுதான் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதைப் பார்த்து அதாவது பூனையைப் பார்த்து சூடு போட்ட கதையாக நாங்களும் செய்கிறோம் பாருங்கள் என்று கூறிக் கொண்டு பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு எந்த ஒரு அடிப்படட வசதியையும் செய்து கொடுக்கவில்லை இந்த சுங்கக் கட்டண கொள்ளை கும்பல்.

தற்போது நடைமுறைக்கு வர இருக்கும் சுங்கக் கட்டண உயர்வால் சரக்கு வாகனங்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மிகக் கடுமையாக உயரும் அபாயம் இருக்கிறது.

ஏற்கெனவே எரிபொருள் விலை உயர்வால் கடுமையான விலை வாசி உயர்வை எதிர்கொண்டு போராடும் பொதுமக்களின் தலைமையில் கூடுதல் சுமையை சுமத்துகிறது மத்திய அரசு. பொதுவாக வாகனங்களை வாங்கும்போதே அனைத்துவிதமான வரிகளையும் செலுத்திவிட்ட பின்னரும் சாலை பராமரிப்பு என்ற பெயரில் இந்த பகல் கொள்ளைதான் எதற்கு?

ஆகையால் சுங்கக் கட்டணம் என்ற வசூல் முறையை முற்றாக மத்திய அரசு ஒழித்தாக வேண்டும். இந்த பகல் கொள்ளையை மத்திய அரசு நிறுத்தாவிட்டால் சுங்க கட்டணங்களுக்கு எதிராக அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் போராட்டங்கள் பெரும் போராட்டமாக வெடிக்கும் நிலைமை உருவாகும் என எச்சரிக்கிறேன்.

மத்திய அரசு உடனடியாக இந்த பகல் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 30-ந் தேதி காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் அனைத்து சுங்க சாவடிகள் முன்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

English summary
TVK leader T Velmurugan said, his party will hold protest against Toll Booths on Aug 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X