வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிறார் உதயகுமார்.. கைது செய்ய போலீஸ் ரெடி?
கூடங்குளம்: எளிய மக்கள் கட்சி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் உதயகுமார் நாளை தனது ஆதரவாளர்கள், கட்சியினர் புடை சூழ வேட்பு மனு தாக்கல் செய்ய அஞ்சுகிராமம் வருகிறார். அப்போது அவரை போலீஸார் கைது செய்யலாம் என்பதால் பரபரப்பான சூழல் எழுந்துள்ளது.
கூடங்குளம் போராட்டக் குழுத் தலைவர் உதயகுமார் தற்போது ஆம் ஆத்மி எனப்படும் எளிய மக்கள் கட்சி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார். நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் நாளைய அவர் மனுவைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து உதயகுமார் கூறுகையில், நாளை காலை இடிந்தகரையில் இருந்து வெளியேறி அஞ்சுகிராமத்திற்கு வருகிறேன். அங்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் வந்து மதியம் 12 மணிக்கு மனு தாக்கல் செய்ய உள்ளேன். 30-ந் தேதி முதல் தொகுதியில் பிரசாரத்தை தொடங்க உள்ளேன்.
இடிந்தகரையை விட்டு வெளியேறும் போது போலீசார் என்னை கைது செய்தால் ஜெயிலுக்கு செல்ல தயாராக உள்ளேன். நாங்கள் எளிய மக்களுக்காகவும், அரசியல் மாற்றத்திற்காகவும் மட்டுமே தேர்தலில் நிற்கிறோம்.
எனது சொந்தப் பணத்தில் ரூ.5 லட்சம் வரை மட்டுமே செலவு செய்வேன் என்று நிதிக்குழு நண்பர்களிடம் தெரிவித்துள்ளேன். கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித வருமானமுமின்றி நிதிநெருக்கடியை சந்திக்கும் எனது குடும்பம் இதற்கு மேல் பங்களிக்க முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நிதி உதவி பெரிதும் தேவைப்படுகிறது என்றார்.
உதயகுமார் மீது நெல்லை மாவட்டத்தில்தான் நிறைய வழக்குகள் உள்ளன. அவர் வேட்பு மனு தாக்கல் செய்யப் போவது குமரி மாவட்டத்தில். இருப்பினும் நெல்லை போலீஸார் அதிரடியாக வந்து உதயகுமாரைக் கைது செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் பதட்டம் நிலவுகிறது.