தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போவேன்- உதயக்குமார்
டெல்லி: நான் நேபாளம் செல்ல தடை விதித்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விவாதிக்கும் கருத்தரங்கை நடத்த சமூக ஆர்வலர்கள் முடிவு செய்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக உதயகுமார் திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை டெல்லி சென்றார். மதியம் 1 மணிக்கு இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில்இருந்து காத்மாண்டுக்கு பிற்பகல் 3மணிக்கு செல்ல வேண்டிய விமானத்திற்குரிய பயணச்சீட்டுடன் அவர் சென்றார்.
ஆனால் இந்தியாவில் இருந்து நேபாளம் செல்ல பாஸ்போர்ட் தேவை இல்லை என்பதால் தனது வாக்காளர் அடையாள அட்டையை விமான நிலையகுடியுரிமை அதிகாரிகளிடம் அவர்காட்டினார். விமான நிலைய அதிகாரிகள் உங்கள்மீது போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன. நீங்கள் நேபாள நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் உத்தரவு பெற வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட சூப்பிரண்டு நரேந்திரன் நாயரை விமான நிலைய அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது உதயகுமார் காத்மாண்டு செல்வது பற்றி நான் எந்த முடிவும் எடுக்க முடியாது எனக் கூறினார். இதையடுத்து உதயகுமார் நேபாளத்திற்கு செல்ல விமான நிலைய அதிகாரிகள் தடை விதித்தனர். இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
நேபாளம் செல்ல தடை விதித்தது குறித்து உதயகுமார் நிருபர்களிடம் கூறுகையில், மனித உரிமை மீறல் தொடர்பாக விவாதிக்கும் கருத்தரங்கில் கலந்து கொள்ள நேபாளம் செல்ல இருந்தேன். ஏற்கனவே எனது பாஸ்போர்ட்டை போலீசார் முடக்கியுள்ளதால் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்தேன்.
அப்போது விமான நிலைய அதிகாரிகள் உங்களிடம் விசாரணை நடத்தவேண்டும் என கூறி என்னை 6 மணி நேரம் காத்திருக்க செய்தனர். நீண்ட நேரம் கழித்து விமான நிலையஅதிகாரிகள் நெல்லை மாவட்ட எஸ்.பி.யிடம், நான் நேபாளம் செல்வது தொடர்பாக பேசினர். அப்போது எஸ்.பி. இதில் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. அரசிடம்தான் கேட்க வேண்டும் எனக் கூறிவிட்டார். இதையடுத்து எனக்கு நேபாளம் செல்ல தடை விதித்தனர்.
நான் நேபாளம் செல்வதை திட்டமிட்டு தடுத்துள்ளனர். இது தனிமனித உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது. இது தொடர்பாக நான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன். முடக்கப்பட்ட எனது பாஸ்போர்ட்டை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். என் மீது எந்தவழக்குகளும் இல்லை என அரசு சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளது. ஆனால் போலீசார் விமான நிலைய அதிகாரிகள் என் மீது வழக்குகள் உள்ளன என கூறுகிறார்கள்.
இது முன்னுக்கு பின் முரணாக உள்ளது. இது குறித்தும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நியாயம் பெறுவேன் என்றார் அவர்.