கோர்ட்டில் சரண் அடைய உதயகுமாருக்கு உத்தரவு
மதுரை: தான் கைதாகாமல் இருக்க கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் முன்ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால் அதற்கு அவர் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் குமரியில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அரசின் தடை உத்தரவை மீறி உதயகுமார் செயல்பட்டார் என்று கூறி அவர் மீது கூடங்குளம் போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்குளில் வள்ளியூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையைும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்குளில் உதயகுமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி ஆர். எஸ். ராமநாதன் அவருக்கு முன்ஜாமீன் வழங்கினார். ஆனால் அவர் கீழ் நீதிமன்றத்தில் சரண் அடைந்து ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள 2 பேர் ஜாமீன் பிணைய பத்திரத்தை தாக்கல் செய்துவிட்டு ஜாமீன் பெறலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.